கர்தினால் ஜார்ஜ் பெர்கோலோ ஏன் பிரான்சிஸ் என்னும் பெயரை ஏற்றார்? என்னும் கேள்வி எழுகிறது. வழக்கமாகத் திருதந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இப்படியாக தாங்கள் விரும்பும் பெயரைத் தேர்ந்தெடுப்பதுண்டு. அதன் அடிப்படையில் கர்தினால் ஜார்ஜ் பெர்கோலியோ அவர்களுக்கும் தன்னுடைய பெயரை தேர்ந்து கொள்வதற்கான அனுமதி இருந்தது. இச்சூழலில் அவர், அசிசி நகரின் புனிதராகிய புனித பிரான்சிசின் பெயரைத் தமது புனைப் பெயராக ஏற்றார். இதற்கான சில காரணங்களைத் திருந்தந்தை அவர்களே முன்வைக்கிறார்.
"திருத்தந்தைக்கான தேர்தல் சிஸ்டைன் சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனது அருகாமையில், பிரேசில் நாட்டின் சான் பவுலோவின் பேராயராக இருந்து ஓய்வு பெற்ற மேன்மைத்தங்கிய கர்தினால் கிளவுதியோ ஹும்மஸ் அவர்கள் வீற்றிருந்தார்கள். நான் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகும் நிலையை அடைந்த போது, அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். கடைசியில் மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் பெற்று நான் தேர்வான போது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து அரவணைத்தார். தொடர்ந்து அவர் என் செவிகளில், "ஏழைகளை மறக்க வேண்டாம்" என்று கூறினார். ஏழைகள் என்னும் சொல் எனக்குள் எதிரொலிக்கத் தொடங்கியது. ஏழை என்னும் சொல் எனக்குள் புனித பிரான்சிஸ் அசிசியின் நினைவைக் கொணர்ந்தது. உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்கள் அனைத்தும் என்னுடைய நினைவுக்கு வந்ததன. அவர் காலத்திலும் போர்கள் நடந்தன. ஆனால் அவர் அமைதிக்காக நிலைகொண்டார். ஏழை மற்றும் அமைதி என்னும் சொற்கள் பிரான்சிஸ் அசிசியின் பெயரை ஏற்க என்னை நிர்பந்தித்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் பிரான்சிஸ் அசிசி, ஏழை மனிதர், அமைதியின் மனிதர், இயற்கையைப் பேணியவர், நாம் வாழும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு நாம் சுமூகமான உறவைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. அமைதியின் உணர்வையும், ஏழ்மையின் உணர்வையும் நமக்குள் தருபவராக இருக்கிறார் புனித பிரான்சிஸ். திருச்சபை ஏழையரின் திருச்சபையாகவும் ஏழைத் திருச்சபையாகவும் இருக்க நான் ஆசிக்கிறேன்."
இயேசு சபையைச் சேர்ந்த திருத்தந்தை அவர்கள் புனித பிரான்சிசின் பெயரை ஏற்றிருப்பது சற்று வியப்பாகக் கேட்பவர்களுக்குத் தோன்றலாம். புனித பிரான்சிஸ் அசிசி, 1181 இல் இத்தாலி நாட்டில் அசிசி என்னும் ஊரில் பணக்கார வியாபாரியின் மகனாகப் பிறந்தார். இளம் வயதில், களியாட்டத்தில் நாட்டம் கொண்டிருந்த பிரான்சிஸ், பெயரும் புகழும் அடைய வேண்டும் என்று விரும்பினார். போரில் ஈடுபட்ட அவர் காயப்பட்ட நிலையில் அவர் காட்சி காண்கிறார். சிலுவையில் தொங்கும் இயேசு, தனது கோயிலை புனரமைக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்தார். அவ்வார்த்தைகளைச் சிரமேற் கொண்ட அவர், தான் செபித்துக் கொண்டிருந்த ஆலயத்தை புனரமைக்க ஆரம்பித்தார். அவர் ஆண்டவரிடம் நெருக்கமாக ஆரம்பித்தார். இதைக் கண்ணுற்ற அவருடைய பணக்காரத் தந்தை கோபம் கொண்டார். உலகப் போக்கிலான நடத்தைகளைத் துறந்த அவர், தந்தையின் வீட்டை விட்டு வெளியேறினார். தனக்கிருந்த அனைத்தையும் தந்தையிடம் கொடுத்த அவர், தான் அணிந்திருந்த ஆடைகளையும் அவரிடமே கொடுத்தார்.
நற்செய்தியை வாசிக்கத் தொடங்கிய அவர் அதன் உள்ளர்த்தங்களை முழுமையாகப் புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார். "பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10:9-10) என்னும் சொற்களுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
0 Comments