முன்கதை : அவளைப் பிற தெய்வங்களை வழிபடுமாறு மிரட்டியும் நயமாகப் பேசியும் பார்த்தனர். அவள் அவர்களுக்குச் செவிமடுக்கவில்லை. அவளிடம் நயமாகப் பேசி அவள் மனதை மாற்ற ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அதிலும் வெற்றிபெற முடியாத அவர்கள் அவளை சூழ்ச்சி வலையில் வீழ்த்த நினைத்தனர்.
அவள் எதுவும் கேட்காதது போல் நின்றாள். அந்த குட்டி அதிகாரி பலமுறை அவளிடம் கூறியும் அவள் கேட்கவேயில்லை. பொறுமையிழந்த அதிகாரி சிங்கம் கர்ச்சிப்பதைப் போன்று கர்ச்சித்தான். அதற்கும் அவள் பொறுமையையே பதிலாகத் தந்தாள். என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றான் அவன்.
தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததைக் கண்ட அவ்வதிகாரி மீண்டும் தன் மேலதிகாரியிடம் சென்றான். நடந்தவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறினான். அனைத்தையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த அவ்வதிகாரி பலவாறு யோசித்தார்.
“இவளை மனமாற்றம் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இருப்பினும் நான் தோற்கவும் விரும்பவில்லை. முடியாது என்று நான் சொன்னால் மறுகணமே எனது பதவி பறிபோகும். தோல்வி மேல் தோல்வியே வருகிறது. எனினும் எப்படி தோல்வியை ஒப்புக்கொள்வது? தோல்வியை ஒப்புக்கொள்வதை விட இறப்பதே மேல்''
மனதுள் கூறிக்கொண்ட அவ்வதிகாரி,
“நண்பா என்னிடம் இன்னும் ஒரு சிறந்த யோசனை இருக்கிறது. அதை நீ அவளிடம் பிரயோகித்தால் அதில் நிச்சயம் அவள் வீழ்ந்து விடுவாள்”.
"எனக்கு ஒரு யோசனையும் வேண்டா சாமி. ஆளை விட்டால் போதும்”.
கூறியவாறு அவ்விடம் விட்டு நகர முயற்சித்தான் அந்த குட்டி அதிகாரி.
"எனக்குக் கீழ்படியாமல் நீ போனால் அது உனக்குப் பேராபத்தாக முடியும் என்று உனக்கு நன்றாகத் தெரியும். அப்படி தெரிந்திருந்தும் நீ செல்வதாக இருந்தால் இவ்விடம் விட்டுச் செல்லலாம்.”
கண்டிப்புடன் அதிகாரி கூறியது கேட்ட குட்டி அதிகாரி இன்னும் அதிகமாக நடுங்கினான். மின்னல் போல அந்த மேலதிகாரியின் காலில் வீழ்ந்தவன் அப்படியே அவன் காலைப் பற்றிக் கிடந்தான்.
“ஐயா எப்படியாவது நீங்கள் என்னை இச்சோதனையிலிருந்து விடுவிக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டுமே எனக்கு விமோசனம் கிடைக்கும்”.
“நீ கூறுவது உண்மைதான். எல்லோருமே இப்படி முடியாது முடியாது என்று சென்றால் நான் என்ன செய்வது? உங்களை வைத்துத் தானே நான் இந்த செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது”. மௌனமாய், அதே நேரம் மிகவும் பௌவியமாய் நின்ற அந்த குட்டி அதிகாரி மீது சற்றே பரிதாபம் தோன்றியது அந்த மேலதிகாரிக்கு. அவர் அவனை நோக்கி அவ்விடம் விட்டு போகுமாறு கையசைத்தார். மீண்டும் ஒருமுறை கூட உயிர் கிடைத்த திருப்தியில் அவன் அவ்விடம்விட்டுச் சென்றான். எனினும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக அவன் மனதில் அப்போதும் குழப்பங்களே நிறைந்திருந்தன. அவன் சென்றபின் மீண்டும் சிந்தனையில் மூழ்கினார் அந்த மேலதிகாரி. அவர் மனதின் வழியே அவ்வேளைகளில் நற்சிந்தனைகள் ஒன்று கூட ஓடவில்லை. அனைத்துமே அவச் சிந்தனைகளாகவும் அவலச் சிந்தனைகளாகவுமே இருந்தன. அவரின் கீழ் பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும் அவர் தமது நினைவில் கொணர்ந்தார். அவர்களின் செயல்பாடுகள் பற்றி அலசினார். எதிலுமே அவருக்கு எவ்விதான பிடித்தமும் கிடைக்கவில்லை. தனது நண்பர்களைப் பற்றியும் அவர் சிந்திக்க தவறவில்லை. எதுவுமே அவருக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை . தனக்கு பல வேளைகளில் ஏவலர்களாக இருந்த பலரையும் கூட அவர் நினைத்தார். அதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. பல தருணங்களில் அவர் தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்திய அந்த குண்டர் படையையும் நினைத்துப் பார்க்க மறக்கவில்லை. தனது ஆசைகளை நிவர்திச் செய்து கொடுத்த பலரைப் பற்றியும் அவர் யோசித்தார்.
"இப்போது நான் செய்கின்ற பணி ஒரு சாதாரணப் பணி அல்ல. இது எனது எதிர்காலம் சார்ந்த பணி. என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற இப்பணி எனது மதிப்பீடுகளையும் என் மீது அதிகாரிகளுக்கு மதிப்பையும் உயர்த்தக் கூடியது. என் மீது முழு நம்பிக்கை உள்ளதாலேயே நீதிபதி அப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இதில் நான் தோற்கவே கூடாது. இதில் நான் தோற்றால் நான் எதிர்பார்த்திருக்கின்ற நீதிபதி பதவி எனக்குக் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எப்படியாவது அவளை கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற்றி வைதீக மதத்திற்குக் கொண்டு வந்தால் நிச்சயம் நான் நீதிபதி ஆவேன். அதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் தருவதாகத் தலைமை நீதிபதியும் வாக்களித்துள்ளார். 'எண்ணெய் திரண்டு வர உடையும் தாழி போல்' ஆகாமல் பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு எதையும் செய்ய தயாராக நான் இருக்கிறேன். கழுதைக் காலைப் பிடித்தாவது காரியம் ஆக வேண்டியதுதான்”. மீண்டும் யோசனையில் மூழ்கினார் அவர். அவரது சிந்தனையில் அவர் கண்முன் அவரது பழைய சிநேகிதி புன்னகைத்தவாறு வந்து நின்றாள். “ஓ... இப்படி ஒரு தோழி இருப்பதை மறந்தே போனேன். அவளால் முடியும். அவளால் நிச்சயம் முடியும்”.
சுருள் முடியும் சிவப்பு மேனியும் காந்தக் கண்களும் புன்னை அரும்பொத்த மூக்கும் கொண்ட அந்த நாற்பது வயதுக்காரியை அழைத்து வருமாறு தனது ஏவலர்களுக்குக் கட்டளையிட்டார் மேலதிகாரி. தத்தம் பதவிக்கேற்ப அறநெறி வளர்க்கும் கடமை கொண்டிருந்த அதிகாரிகள் தங்களுக்கு அந்த சாஸ்திரம் பொருந்தாது என்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அதனால் அதிகாரிகளுக்குத் தத்தம் பதவிக்கேற்ப பல ஆசை நாயகிகள் இருந்தனர். அவர்கள் மூலம் இவ்வதிகாரிகள் ஏராளம் சாதித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
மேலதிகாரி அழைத்து வரக் கூறியிருந்த அந்தப் பெண்மணி முன்னர் வைதீக சமயத்தைச் சார்ந்திருந்தவள். பின்னர் கிஸ்தவத்திற்கு மாறியிருந்தாள். கிறிஸ்தவத்திற்கு மாறியபின் அவள் தன் பழைய நிலையிலிருந்து மாறி புது வாழ்வு வாழ்ந்து வந்தாள். சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அரசாணைகளுக்கு அஞ்சி மீண்டும் அவள் தன்னை வைதீக சமயத்தில் இணைத்திருந்தாள். எனினும் அவள் கிறிஸ்துவின் மீதும் கிறிஸ்தவத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுடையவளாகவே இருந்தாள். வெளியுலகப் பார்வையில் அவள் 'எஸ்ஸிஸ்' தெய்வத்தை வழிபடுபவளாக காட்சியளித்தாள்.
ஏவலர்களால் அழைத்து வரப்பட்ட அவள் மேலதிகாரியின் முன் வந்து நின்றாள். அவளைக் கண்டதும் அதிகாரியின் உள்ளத்தில் பழைய நினைவுகள் அலைமோதின. எனினும் அவர் அதை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. அவள் அழைத்து வரப்பட்டதன் நோக்கத்தை அவ்வதிகாரி அவளிடம் கூறினாள். அனைத்தையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த அவள்,
“நீங்கள் கூறியபடியே நான் நிச்சயம் செய்வேன். அப்படி நான் செய்தேனாகில்...”
“நான் என்ன செய்ய வேண்டும்? சொல்”.
“உங்களைப் பொறுத்தமட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு”.
"உனது நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது”.
அளவுக்கதிகமான தன்னம்பிக்கையோடு அவள் அவ்விடம் விட்டு அகன்றாள்.
மேலதிகாரியின் தோழி கூறியவாறு அவள் மீண்டும் எஸ்ஸிஸ் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டாள். அங்கே பல்வேறு கோலங்களில் காணப்பட்ட கடவுள்களை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாதவளாய் அவள் நின்றிருந்தாள். பல்வேறு சாம்பிராணிகளின் புகைகளும் மணங்களும் அங்கே புகைந்துகொண்டும் வீசிக்கொண்டும் இருந்தன. அவைகள் எதுவுமே அவளுக்குப் பிடித்தபாடில்லாமலிருந்தது. எனினும் அவள் அவற்றை வெறுக்கவோ அருவருப்பூட்டுவதாக நினைக்கவோ இல்லை. மாறாக அனைத்தையும் அவள் சகித்துக் கொண்டாள். ஆலயத்தின் கருவறைத் திறக்கும் சத்தம் அவள் காதில் விழுந்தது. எனினும் அவள் தன் கண்களை ஏறெடுக்காமல் இருந்தாள். திறந்த வாசல் வழியே ஒரு முனகல் சத்தம் கேட்டது. அச்சத்தம் "இயேசு...இயேசு...இயேசு..." என்று முனகியது. அவள் அச்சத்தம் வந்த திசையில் மெல்ல ஏறெடுத்தாள். அங்கே மேலதிகாரியின் தோழி முனகியவாறு நின்றுகொண்டிருந்தாள். அவள் அவளையே பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். முனகல்காரி அவளை நோக்கி மெல்ல மெல்ல வந்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்தவள்,
“ஆண்டவர் இயேசு உனக்குத் துணையாக இருப்பாராக”. கூறியவாறு தனது அரையில் மறைத்து வைத்திருந்த அச்சிறு மரச்சிலுவையை அவளிடம் காண்பித்தாள். சிலுவையைக் கண்ட அவள் அச்சிலுவையை நீண்ட குளிரிலிருப்பவள் போர்வையைக் கண்டதும் விரைந்து இழுத்துப் போர்த்திக் கொள்வதைப்போல தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். மெல்லிய குரலில் அவளை நோக்கி,
“நீங்கள்...”
“நான் இயேசுவை இடைவிடாது புகழுந்து ஆராதிக்கும் ஒரு கிறிஸ்தவள்”.
“நீங்கள்...”.
“நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள். இயேசுக் கிறிஸ்துவை என் மனதில் மணம் செய்துள்ளேன். அவரை நான் முழுமையாய் நம்புகிறேன். அவரை நான் முழுமையாய் ஆராதிக்கின்றேன். அவரையன்றி உலகோர் காட்டும் வேறொரு கடவுளை வழிபட நான் தயாராக இல்லை. அத்தகு பாதகச்செயல் செய்ய என்னால் இயலாது. வைதீகக் கடவுள்களை வழிபட என்னிடம் சொன்னார்கள். நான் அதற்கு இசையவில்லை. என்னைச் சித்திரவதைச் செய்து மனமாற்றப் பார்க்கிறார்கள். என் இயேசு என்னோடிருக்கும் வரை நான் என் நிலையில் ஜெயித்துக் கொண்டேயிருப்பேன்''.
“நானும் சில நாட்களுக்கு முன்வரை இப்படித்தான் இருந்தேன். என்னையும் உன்னைப்போன்று சித்திரவதை செய்தார்கள். நான் மனம் மாறவே இல்லை. அப்படியிருக்க ஒருநாள் கனவில் ஒரு காட்சிக் கண்டேன். அதில் துதர் ஒருவர் என்னிடம் வந்து, 'நீ இப்படி சித்திரவதை அனுபவிக்கின்றாய். இப்போது சித்திரவதையின் தாக்கத்தால் முன்புபோல் உன்னால் இயேசுவை ஆராதிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் கூறுவதைப்போன்று செய். அதை நீ மனமார செய்ய வேண்டியதில்லை. வெளிவேடம் போடு. அவர்கள் கடவுளை வழிபடுவதைப் போல பாசாங்குச் செய். உன்னை விட்டு விடுவார்கள். நீ இரகசியமாக எவ்வித சித்திரவதையும் இன்றி உன் இயேசுவை வழிபடலாம்' என்று கூறிவிட்டு மறைந்தார். எனக்கு அது சிறந்ததாக இருந்தது. இப்போது எப்போது வேண்டுமானாலும் என்னால் தடையின்றி இயேசுவை வழிபட முடிகிறது. நீயும் ஏன் இப்படி செய்யக்கூடாது?'
“நீங்கள் செய்வது பெரும் பாவம். இறை துரோகம். இதற்கு மன்னிப்பே இல்லை...''. ஆவேசமாய் அவள் கூறிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவள் வாயிலிருந்து இரத்தம் கொப்பளிக்கத் தொடங்கியது.
(தொடரும்...)
0 Comments