குடும்பம் இனிதாக குடும்ப செபம் | ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன்

எனதருமை சீனாய் வாசக சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் ஈசோ மெசியாவின் பெயரால் வாழ்த்துக்கள்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மலர்ந்ததும்  நம் நினைவுகளில் அலையாக எழுபவர் செபமாலை அன்னை. கடவுளை நம்பி வாழும் நமக்கு மரியா தந்த பேரருள் கொடைதான் செபமாலை. இந்நாட்களில் கொரோனா தொற்றின் தாக்குதல் நம்மைத் தீண்டாமலிருக்க அரசு பல கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் தந்துள்ளது. அதன் அடிப்படையில் சில குறிப்பிட்ட நாட்களில் நாம் கோயில்களில் ஒன்று கூடி பலி ஒப்புக்கொடுக்க இயலாத நிலையில் உல்ளோம். ஆனால் நாம் ஒன்றித்து மன்றாட இயலாச் சூழலில் நமது குடும்பங்களில் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பினைத் துளியும் இழக்கவில்லை.


நம் குடும்பங்களில் நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம். பல கட்டுமானப் பணிகளை தொடர்வோம்; உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக முயற்சிப்போம்; வணிகச் சந்தையில் புதிதாக உற்பத்தியாகும் பொருட்களை என்ன விலையானாலும் வாங்கி மகிழ்வோம். இவைகளுக்கெல்லாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிட நாம் தயாராக உள்ளோம். ஆனால் குடும்பமாக ஒன்றித்து செபிக்க மட்டும் நமக்கு நேரம் கிடைக்கவில்லை எனச் சொல்வோம். அப்படியென்றால் நம் நிலைப்பாட்டில், திட்டமிடலில், அருள்வாழ்வில், உறவில் ஏதோ ஒரு கோளாறு உள்ளது.

கூடி செபிக்கும் பண்பாட்டில் எந்தக் குடும்பம் திளைக்கிறதோ அந்தக் குடும்பத்துள் அமைதி தவழும், அன்பு வேரூன்றும், ஆனந்தம் தென்றலாகும், மதிப்பு மாண்புறும், மனக்கவலை தூரப்போகும். அக்குடும்பத்திற்குள் விண்ணகம் விடியலாகும். எப்போது ஒரு குடும்பம் ஒன்றித்து இறைவேண்டலில் ஈடுபடுகின்றதோ அப்போது அவர்கள் இறையாட்சியைத் தங்கள் இல்லத்திற்குள் வருவித்துக் கொள்கிறார்கள். நாம் வாழும் குடும்பங்கள் இறையாட்சியின் இருப்பிடமாகின்றபோது நமது சமூகத்தில் அதன் விழுமியங்கள் விழுதாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

குடும்ப செபம் நம் மனக் காயங்களைக் குணப்படுத்துகிறது. குடும்ப உறவை வளர்த்துகிறது. நன்மைச் செய்யத் தூண்டுகிறது. உடன் வாழ்வோரை நிபந்தனையின்றி ஏற்கவும் மன்னிக்கவும் மனவலிமை தருகிறது. மனக்குரலுக்குச் செவிமடுக்கும் ஆற்றல் அளிக்கிறது. பிறரை கரிசனையோடு அணுகப் பணிக்கிறது. நன்மதிப்பீடுகளில் வாழும் வரம் பொழிகிறது. நம் பலம்-பலவீனங்களை உணர்த்துகிறது. ஒன்றி வாழும் பண்பைக் கற்பிக்கின்றது. இதயத்தை மகிழ்வித்து இறையனுபவம் பெறச் செய்கிறது. இறை நம்பிக்கையை நமக்குள் வளர்த்துகிறது. இத்தகு சக்திமிக்க குடும்ப வேண்டலைப் புறக்கணிக்கும் போது நாமே நமது வளர்ச்சியை, வெற்றியைத் தள்ளிப் போடுகிறோம் என்றேச் சொல்லத் தோன்றுகிறது.

குடும்ப இறைவேண்டலில் முதன்மை பெறுவது செபமாலை. நாம் தினமும் செபமாலை செபிப்பதால் அடையும் நன்மைகள் எண்ண முடியாதவை. செபமாலைதான் நான் விரும்பும் செபம் என்பார் திருத்தந்தை இரண்டாம் ஜாண் பவுல், "திருப்பலிக்கு அடுத்ததாக நான் அதிகம் நேசிப்பது செபமாலையினையே" என மனம்விட்டுச் சொன்னார். அருளாளர் ஆலன் ரோச், "குடும்பமாக செபமாலை செபிக்கையில் அக்குடும்பம் கடவுளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதை உணரலாம்"  என்றார்?. எத்தீங்கும் நம்மை அணுகவிடாமல் அவரே நம்மை அரவணைத்து வழிநடத்துவார்.


குடும்பமாக நாம் செபிக்கையில் மிக முக்கியமான முப்பண்புகளை இதயத்தில் இருத்துவோம்:

 1. நம்பிக்கை 2. பணிவு 3. மன்னிப்பு. இப்பண்புகளை நமக்குள் கொள்ளாமல் எங்கே போய் எத்தனை நாள் வேண்டினாலும், குடும்பமாக மண்டியிட்டாலும் நம் வேண்டுதலின் நிறைபலனை நாம் பெற முடியாது. ஏனென்றால் இம்மூன்று பண்புகளுமே செபமாலையின் கதாநாயகியாம் புனித கன்னிமரியாவின் வாழ்வில் மின்னித் துலங்கியவை. 

எனவே என் அன்புக்குரியவர்களே! திரு அவை நமக்குத் தந்துள்ள அற்புத அருள் கருவியான செபமாலை வழியாகக் கடவுளின் அருள் அருவியில் நனைவோம். கழுத்திலும் கைவிரலிலும் இடுப்பிலும் வாகனங்களிலும் இட்டு அழகு பார்ப்பதற்கானது அல்ல செபமாலை. அதனைக் கையிலேந்தி குடும்பமாக கூடி செபிப்போம். புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் சொல்லுவது போல "செபிக்கும் முறைகளில் மிகச் சிறந்த முறை செபமாலை சொல்வதாகும்." அச்செபமுறையை நாம் அன்றாடம் குடும்ப வாழ்வில் செயலாக்குவோம். வெற்றி காண்போம். உங்கள் அனைவருக்கும் என் அன்பின் ஆசி.

Post a Comment

0 Comments