கடவுளெனும் தாய் | அ. சந்தோஷ்

தாய் என்னும் சொல் நமக்குள் பலவிதமான உணர்வுகளை ஏற்படுத்துவதுண்டு. தாயின் அரவணைப்பு, கவனிப்பு, அக்கறை, ஆகியவை நமது உணர்வுகளோடு கலந்து, சிந்தனையை மட்டுமல்ல நமது உடலையும் ஆட்கொள்கிறது. அவளை விட்டு விலகி இருக்கையில் தவிப்புகள், ஏக்கங்கள், தனிமைகள் ஆகியவை ஆட்கொள்வதுண்டு, உடலையும் ஏதேதோ செய்வதுண்டு. இத்தகையத் தவிப்புகளையும் ஏக்கங்களையும் நமக்குள் ஏற்படுத்தும் குணங்களைப் பெற்றவராக நம்முடைய விண்ணகத் தந்தையானவர் இருக்கிறார் என்பதே உண்மை. பொதுவாக ஆணின் இயல்புகளைக் கொண்ட, வன்மையான, நெறிப்படுத்தும், ஒழுக்கங்களைக் கற்பிக்கும், கண்டிப்பு மிக்க கடவுளைப் பற்றி நாம் கேட்டு வளரந்திருக்கிறோம். அவர் ஓர் ஆண் என நமது நினைவுகளில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கடவுள் பெண்மையின் இயல்புகளையும் உடையவர் என்பதே உண்மை. மென்மையான அன்பு, அரவணைக்கும் அன்பு, மார்போடு அணைக்கும் அன்பு, மடியில் வைத்து தாலாட்டும் அன்பு, அழுவோரின் கண்ணீரைத் துடைக்கும் அன்பு, எனத் தாய்மையின் குணங்களைச் சுமந்தவராக தந்தை இருக்கிறார் என்பதை விவிலியலம் நமக்குக் காட்டுகிறது. 


காணாமல் போன மகனின் உவமையில் தாய்

காணாமல் போன மகன் திரும்பி வரும்போது, அவனை அள்ளி அரவணைக்கும் தந்தையின் கரங்களை 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு கலைஞரான ரெம்ராண்ட் அவர்கள் வரைந்து வைத்தார். அத்தந்தையின் கரங்களுள் ஒன்றானது தாயின் கரமாக இருக்கிறது. 

காணாமல் போன மகனின் உவமையைச் சற்று மறுவாசிப்புக்கு உட்படுத்தினால், கடவுளின் பெண்மையின் இயல்புகள் நம்மால் நன்று விளங்கிட இயலும். அதற்காக நாம் அவ்வுவமைக்குள் கதாபாத்திரத்தை இடைச்சொருகல் செய்தாக வேணடும். 

அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இளைய மகன் தனக்குரிய சொத்துக்களைப் பிரித்து வாங்கிக் கொண்டு புறப்பட தயாராகிறான். இதையெல்லாம் அவ்வீட்டின் தாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சஞ்சலமடையும் அத்தாய் உடைந்து போன உள்ளத்துடன் மகனைப் பார்த்து, “என் அன்பு மகனே, உனக்காக இவ்வீட்டின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கும். நீ செல்லும் இடமெல்லாம் எனது செபங்களும் ஆசிகளும் உன்னோடு தங்கியிருக்கும்” எனக் கூறுகிறாள்.

இதைக் கண்ணுறும் மூத்த மகன், தாயிடம் “சொற்பேச்சுக் கேட்காத, நெறிகெட்ட இவனைத் தந்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்” எனக் கூறுகிறான். அதற்கு அத்தாய், “மகனே நீ எப்போதும் இவ்வீட்டின் மகன். எனதருமை மகனே, உன்னுடைய இதயத்தை கடினமாக்கிக் கொள்ளாதே. உனது தம்பி தொலைந்து போயிருக்கிறான், அவன் வருகைக்காக காத்திரு” என்கிறாள். ஒரு ஓராமாக நின்றவாறு இதைக் கவனிக்கிறார் தந்தை. தாய் அவரை ஒரு கணம் நோக்கினாள். இதய உணர்வுகளும் இருவருக்குமிடையே பரிமாறப்பட்டன. இருவரும் கலங்குகின்றனர். மகன் வருவான் என்னும் எதிர்நோக்குடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிக்கிறார்கள். 

ஆண்டுகள் பல கடந்தன. இளைய மகன் திரும்புகிறான். மகனின் வருகையால் அப்பாவின் முகமானது மிகவும் மலர்ச்சி அடைந்திருப்பதை அத்தாய் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கிறாள். குலைந்த குடும்பம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. 

விருந்துகளும் கொண்டாட்டங்களும் முடிகின்றன.  மூத்த மகனால் இவற்றைச் செரித்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குள் நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. மாலையில் அவன் சமையலறைக்குச் செல்கிறான். சமைத்துக் கொண்டிருக்கம் தாயிடன், “இங்கே என்ன நடக்கிறது. எல்லாருக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா? தன்னுடைய சொத்துக்களை அழித்துவிட்டு வந்த மகனைக் கட்டிப்பிடிக்கிறார், விருந்து கொண்டாடுகிறார். இங்கே என்ன நடக்கிறது” எனப் புலம்பித் தள்ளுகிறான். அனைத்தையும் கனிவுடன் கேட்டுக் கொண்டிருக்கும் தாய், “மகனே நான் உன்னை அறிவேன். நீ வீட்டிற்காக எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்படுகிறாய் என்பதையும் நான் அறிவேன். தம்பியைப் பற்றி என்ன நினைக்கிறாயோ, அவற்றையெல்லாம் அவனிடம்  சென்று சொல். ஆனால் அதை அன்புடனும் பரிவுடனும் சொல்.  தீர்ப்பிடும் எண்ணத்துடன் சொல்லாதே. தீர்பிட்டால் அவனை உன்னால் அன்பு செய்யவும் முடியாது, அவனை புரிந்து கொள்ளவும் முடியாது” எனக் கனிவாகக் கூறி அனுப்புகிறாள்.

காணாமல் போன மகனின் உவமையில் தாயின் கதாபாத்திரத்தைப் புகுத்திய போது கதை வேறு விதமாக மாறுகிறது. ஆனால் இயேசு கூறிய உவமையில் தாயின் உருவகமானது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது. காரணம், அங்கே தாயின் கதாபாத்திரத்தை அக்குடும்பத்தின் தந்தை அவர்களே கையாளுகிறார். மேற்கூறிய மறுவாசிப்பில் வரும் தாயின் அனைத்து இயல்புகளையும் வெளிப்படுத்துபவராகத் தான் தந்தை இருந்தார். ஆகையால் தான் ரெம்ராண்ட் என்னும் கலைஞர், தந்தையின் கரங்களுள் ஒன்றைத் தாயின் கரமாக வரைந்து வைத்தார். 

விண்ணகத் தந்தையில் துலங்கும் தாய்மை

விண்ணகத் தந்தையானவர், தாயின் அனைத்துக் குணங்களையும் உடையவராய் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். இந்தத் தந்தையவர் உலகில் உருவம் பெற்று தாயாக மாறியிருந்தார் என்றால் எப்படி இருப்பார் என்பதை அன்னை மரியாள் வழியாகக் கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தைக்கடவுளின் தாய்மையின் உணர்வுகளை, பெண்மையின் அழுத்தமான அன்பின் வெளிப்பாடுகளைத் தாய் மரியா வெளிப்படுத்துகிறாள். இந்த உணர்வைத் தொடக்ககால கிறிஸ்தவர்கள் ஏற்றிருந்தார்கள். அவர்களுடைய வாழ்வின் பகுதியாக மரியா மாறியிருந்தாள். சிலுவையின் அடியில் வைத்து, இதோ உன் தாய் என யோவானிடம் இயேசு கூறியது தொடங்கி, அவள் திருச்சபை மாந்தர் அனைவரின் அன்னையாக மாறியது மட்டுமல்லாமல், தந்தைக் கடவுளின் இரக்கமிக்க, மென்மையான அன்பை அவள் பிரதிபலிக்கத் தொடங்கினாள். இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர், உடைந்து போய், அஞ்சி வாழ்ந்த திருத்தூதர்களைத் திரட்டி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, செபத்தில் ஈடுபட வைத்து, தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்காகத் தயார் செய்கிறார். இவ்வாறாக, திருத்தூதர்களுடன் நெருக்கமாக இருந்த தாய், திருச்சபை வரலாற்றின் பகுதியாக மாறுகிறாள். இயேசு சிலுவையில் வைத்துக் கூறியவை வெற்று வார்த்தைகளாக நின்றுவிடாமல் அது திருச்சபை வரலாற்றில் இடம் பெற ஆரம்பித்தது. தொடக்க நூற்றாண்டுகளில், அதாவது, முதல் நூற்றாண்டுகளில், திருச்சபை அத்தாயோடு கொண்டிருந்த அன்பின் பிணைப்பானது, அவளைக் கடவுளின் தாய் எனும் விசுவாச உண்மையின் பிரகடனத்திற்கு வழிகோலியது. 431 ஆம் ஆண்டில் இன்றைய துருக்கி நாட்டில் எபேசில் வைத்து நடந்த பேரவையின் போது, மரியாள் கடவுளின் தாய் என அறிவிக்கப்பட்டாள். மனிதராகப் பிறந்த இயேசு ஒரே வேளையில் கடவுளாகவும் மனிதராகவும் இருக்கிறார் என்பதை ஏற்றத் திருச்சங்கம், மரியா கடவுளாகவும் மனிதராகவும் பிறந்த இயேசுவின் தாய் எனப் பிரகடனம் செய்து, அவளை தேவத்தாய் அல்லது இறைவனின் தாய் என அழைத்தது. 

கடவுளின் தாய்மையும் மரியாவும்

இப்படியாக, தந்தைக் கடவுளின் தாய்மையின் அல்லது பெண்மையின் உருவமாக தாய் மரியாள் மாறினாள். இன்று ஏராளமான மக்கள், இத்தாயிடம் செபங்களை ஏறெடுக்கிறார்கள், தங்கள் கண்ணீரின் கதைகளைக் கூறுகிறார்கள், வேதனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தேவையானவற்றைக் கேட்கிறார்கள். இயேசுவிடம் நேரடியாக கேட்பதை விடவும் தாய் மரியாவிடம் கேட்பது எளிதானதாக மக்கள் கருதுகிறார்கள். கத்தோலிக்கர்கள் என்றதுமே, அத்தோடு இணைந்து மாதாவின் உருவமும் வந்து விடுகிறது. குறிப்பாக தமிழகத்தில், கத்தோலிக்கத் தேவாலயங்கள் எல்லாம் பெரும்பாலும் மாதாக் கோயில் என்றே அறியப்படுகின்றன. இவ்வாறாக கத்தோலிக்க விசுவாசிகளுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறி விட்டார் தாய் மரியா. அவரிடம் ஏறெடுக்கப்படும் வேண்டுதல்கள் அனைத்துக்கும் உடனடியாக பதில் கிடைக்கிறது என்பது பொதுவான விசுவாசமாக உள்ளது. மாலை வேளைகளில் கத்தோலிக்க குடும்பங்களில் ஏறெடுக்கப்படும் குடும்ப செபங்கள் அனைத்தும் அன்னை மரியாவை மையப்படுத்தியே கூறப்படுகிறது. அவளோடு சேர்ந்து செபித்தல் மிகவும் எளிமையானது என்றும், விசுவாசத்தில் ஆழப்படவும் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காக்கவும் அது உதவியாக இருக்கிறது என்பதும் பொதுவாக நம்முடைய விசுவாசமாக இருக்கிறது. அன்னை மரியாவிடம் ஏறெடுக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் கிறிஸ்துவை மையப்படுத்தியது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. அவளுடைய உதரத்தில் தோன்றிய இயேசுவால் தான் அவள் இன்று இறைவனின் அன்னையாக வலம் வருகிறாள். சிலர் கத்தோலிக்கர்களைப் பார்த்து குறை கூறுவதுண்டு. நீங்கள் ஏன், மாதாவிடம் செபிக்கிறீர்கள், இயேசுவிடம் செபிக்கலாமே என்று. திருத்தந்தை புனித ஜாண் பால் அவர்கள் அற்புதமான ஒரு சிந்தனையைத் தருகிறார். மனிதர்கள் தான் யாரிடம் செபித்தால் வேண்டுதல் கேட்கப்படும் என்று தங்களுக்கு வாய்த்திருக்கும் சிறு புத்தியைப் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். மனிதர்களுக்கிடையே தான் போட்டி பொறாமைகள் நிலவுகின்றன. இயேசுவுக்கும் தாய் மரியாவுக்கும் இடையே இத்தகையப் போட்டி பொறாமைகள் எதுவும் இல்லை. அன்னை மரியாவிடம் நாம் வேண்டுதல் ஏறெடுக்கும் போது, அதைப் பார்த்து பொறாமைப் படுபவர் அல்லர், இயேசு.  ‘ஐயோ மக்கள் யாரும் என்னிடம் வரவில்லையே, எனது தாயிடம் அல்லவா செல்கிறார்கள்’ என்று கவலைப்படுவதில்லை. தாயிடம் கேட்பவை அனைத்தும் தன்னிடம் கேட்பவையே என்பதை இயேசு அறிவார். தனது தாயிடம் கண்ணீர் விட்டு செபிக்கின்ற மக்களுக்கு, அவர் பதில் அளிக்காமலா இருக்கப் போகிறார்? ஆகையால் நீங்கள் தைரியமாக தாய் மரியாவிடம் செபங்களை ஏறெடுங்கள் எனத் திருத்தந்தை அழகாக விளக்கம் தருகிறார். ஆகையால், எவ்வித சந்தேகங்களுமின்றி செபங்களை ஏறெடுக்கலாம். தாயிடம் கேட்பவை எல்லாம் தனயனிடம் நேரடியாகச் சென்று சேர்கிறது என்பதை திண்ணமாக நம்புவோம்.


Post a Comment

0 Comments