பொறுமை எனும் ஆற்றல் | பபிஷா ஜூலிட்

றைவனின் தாயாக அழைக்கப்பட்ட மரியா தாழ்ச்சி, அமைதி, பொறுமை, நம்பிக்கை ஆகியவற்றில் நிலைத்திருந்தார். அன்னை மரியா வாழ்க்கை முழுவதும் பொறுமையாக இருந்தது, அவர் ஒரு கோழை என்பதற்குச் சான்று என்று கூறும் மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள்.

பொதுவாக நம் மத்தியில் வாழும் மனிதர்கள் பொறுமைசாலியாக இருந்தாலே அவள் ஒறு கோழை என்று கேலி செய்யும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் பல மனிதர்களை புனிதர்களாகவும், கோழைகளை வீரர்களாகவும், சாதாரணமானவர்களை வெற்றியாளர்களாகவும் மாற்றிய பேராயுதம் இந்த பொறுமை என்னும் மகத்தான குணம் தான். பொறுமை கோழைத்தனம் அல்ல; அது மிகச்சிறந்த வலிமை.

           "அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்
            கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
            ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
            வாடி இருக்குமாம் கொக்கு"

என்பது ஒளவையின் மூதுரை. தன்னுடைய இலக்கான பெரிய மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு போன்று தான் தன்னுடைய இலக்கை அடையும் வரை பொறுமையுடன் செயல்படுபவர்களை அறிவில்லாதவர்கள் என்று எண்ணக் கூடாது. 

இந்த வேகமான உலகில் மனிதர்கள் மறந்த, இழந்த ஒரு குணம் தான் பொறுமை. எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து முடிக்கும் நிதானமற்ற நிலையே நம்மில் பலபேரில் காணப்படுகிறது. பொறுமை உண்மையிலேயே கடினமானது தான்; பழக்கப்படுத்திக் கொண்டால் அது மிகவும் இயல்பாகி விடும்.


“பொறுமை கசப்பானது ஆனால், அது தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது” என்பது தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூற்று. கனவுகளோடு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுமை ஒரு அசாத்திய ஆற்றலை அளிக்கும்.

விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவனின் மகனின் தாயாகும் அழைப்பைப் பெற்ற மரியா மிகுந்த பொறுமை, தாழ்ச்சி, அமைதி, அன்பு, நம்பிக்கை ஆகிய குணங்களில் நிலைத்திருந்தார். அன்னை மரியின் வாழ்க்கை பெரும்பாலும் பயணங்களாகவே இருந்தது. எலிசபெத்தம்மாவை சந்திக்க விரைந்தது முதல் கல்வாரி பயணம் வரை அவர் பயணித்த பயணங்கள் எளிதானதாக இல்லை. கடினமானதாகவும் வேதனை நிறைந்ததாகவும் எதிர்நோக்குடையதாகவும் இருந்தது. இந்த பயணங்களை மேற்கொண்டு இலக்கை அடைய மிகுந்த ஆற்றலும் துணிவும் தேவைப்பட்டது. இந்த ஆற்றலையும் துணிவையும் பெற்றுத் தந்தது அவரது பொறுமை. அன்னை மரியா தன் நீடிய பொறுமையால்தான் வாழ்வில் ஏற்பட்ட நெடிய துயர்களை வெற்றி கொண்டார்.

ஆனால், அவர் தன் வாழ்க்கை முழுவதும் பொறுமை கொண்டதாலும், எதையும் எதிர்த்து பேசாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டதாலும் அவர் ஒரு கோழை என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அன்னை மரியின் பொறுமையைப் பற்றிப் பேசும் போது, சீன நாட்டில் ஒரு அரிய வகை மூங்கில் சரியான எடுத்துக் காட்டாக இருக்கும். இந்த மூங்கில் செடியை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிடுவார்கள். ஆனால் இரண்டு மூன்று வருடங்கள் கடந்தும் செடி வளராது அப்படியேத் தான் இருக்கும். ஆனால் நான்கு ஐந்து வருடங்களில் ஒரே ஆண்டில் 80 அடி உயரம் வரை வளரும். அவ்வளவு பெரிய மரம் எந்த சூறாவளி காற்றிலும் நிலை குலைந்து போகாது. முதல் நான்கு ஐந்து வருடங்கள் இந்த மூங்கில் தன்னுடைய வேரினை மண்ணுக்கு அடியில் பாய்ச்சி அடித்தளத்தினை மிக சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது.

இப்படி நம் அன்னை மரியாவும் ஒரு சாதாரணப் பெண் தான். கடவுளின் திருவுளத்திற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர். ஆனாலும் அவர் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவரால் முழுமையாகப் புரிந்து  கொள்ள முடியவில்லை. அவரது மனித மூளைக்கு எட்டாத பல புதிர்கள் அவர் வாழ்வில் இருந்தது. ஆனால் அவர் தாமாக ஒரு முடிவிற்கோ அல்லது பதிலுக்கோ வரவில்லை. பொறுமையோடு காத்திருந்தார். லூக்கா நற்செய்தியாளர் கூறுவது போல இறைவனின் தாயாக இறைவனால் அழைக்கப்பட்ட மரியா தாழ்ச்சி, அமைதி, பொறுமை, நம்பிக்கை ஆகியவற்றில் நிலைத்திருந்தார். அன்னை மரியா வாழ்க்கை முழுவதும் பொறுமையாக இருந்தது. அவர் ஒரு கோழை என்பதற்குச் சான்று என்று கூறும் மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். “இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக் 2:51). அன்னை பொறுமையை ஆற்றலாய் சேமித்தார். அதனால் ஆராய்ந்து செயல்பட்டார். அதனால் தான் கடவுளின் மீட்புத்திட்டத்தில் முழுமையாய் நிலைத்து நிற்க முடிந்தது.

சிமியோன் “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:35) என கூறியவுடன், இது எத்தகைய துன்பமோ? என்னால் தாங்க முடியுமோ என்று உள்ளம் பதைபதைத்து. நிலை குலைந்து போகவில்லை மரியா. பொறுமையாக ஆராய்ந்து தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அன்னை மரியின் பொறுமை அவளைக் கோழையாக மாற்றவில்லை. உலகை மீட்கும் மாபெரும் மீட்புத்திட்டத்தின் கருவியாக மாற்றியது. 

பொறுமையின்மை தான் இன்று பலபேரை கோழைகளாகவும் வலுவற்றவர்களாகவும் மாற்றி வருகிறது. வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுதும் தேர்வுகளுக்காக தயராகும் போதும் வேலை வாய்ப்புகளைத் தேடும் போதும் பொறுமையை நாம் இழப்பதால் வாழ்க்கையையே இழக்கத் தயாராகும் வலுவிழந்தவர்களாக மாறுகிறோம். வாழ்க்கைப் பயணம் பல திருப்பங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. சிறு களைப்பில் பயணத்தைக் கைவிடுபவர்களுக்கு அடுத்த திருப்பங்களில் காத்திருக்கும் வெற்றித் தெரிவதில்லை.

சுவாமி விவேகானந்தர் கூறினார்: “நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்.” “வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை?” என்று நாம் எண்ணும் வேளைகளில் பொறுமையுடனும் இறைநம்பிக்கையுடனும் இருந்தால் வாழ்வின் இலக்குகளை அடைய ஆற்றல் கிடைக்கும்.

பொறுமை என்பது ஒரு இறை குணம். பொறுமையால் அசாத்தியங்களை வெற்றி கொண்டவர் அன்னை மரியா. சாதாரண பெண் உலக மீட்புத்திட்டத்தின் மிக முக்கிய கருவியானதும் அதற்காக தான் இவ்வுலகில் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், சவால்கள் அத்தனையும் எதிர்கொள்ள துணிவு கிடைத்ததும் அவளது  நீடிய பொறுமையினாலும் தாழ்ச்சியினாலும் தான்.

அன்னை மரியாவிற்கு அவரது பொறுமை ஆற்றலாய் இருந்தது. வலிமையாய் இருந்தது. இலக்கு நோக்கி பயணிக்க துணிவினைத் தந்தது. பொறுமை ஆளுமைத் தன்மை இறைமையின் அடையாளம். இந்தப் பொறுமையை அன்னை மரியின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம். வாழ்வை எதிர்நோக்குடனும் நம்பிக்கையுடனும் வாழ அழைப்பு பெறுவோம்.


Post a Comment

0 Comments