பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடிய எண்பத்து நான்கு வயது நிறைந்த இயேசு சபை அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் ஜூலை 5, 2021 அன்று மும்பையில் உள்ள திருக்குடும்ப மருத்துவமனையில் வைத்து காலமானார். எல்கர் பரிஷத் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி அவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நடுக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்த அருட்தந்தை அவர்கள் மோசமடைந்து வந்த உடல்நிலையைக் காரணம் காட்டி, மருத்துவ உதவிக்காக கோரியிருந்தார். அவரது கோரிக்கை தேசிய புலானாய்வு முகமையால் எதிர்க்கப்பட்டது. மே மாதத்தில் கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயே அவர் உயிரும் பிரிந்தது. அவர் இறந்த சில மணிநேரங்களுக்குள், சமூக ஊடகம் வழியாகப் பகிரப்பட்ட படம் ஒன்றைப் பார்த்த போது என்னால் தாங்க முடியவில்லை. அருட்தந்தை ஸ்டான் அவர்கள் மருத்துவமனை கட்டிலில், விலங்கிடப்பட்டுக் கிடப்பதாக அப்படத்தில் காண்பிக்கப்பட்டது. பல நண்பர்களை அப்படம் கோபம் கொள்ள வைத்தது. ஆனால் அது வதந்தி என்பது பின்னர் தெரிய வந்தது. அப்படமானது, கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் பாபுராம் பல்வான் சிங் அவர்களுடையது என்றும், உத்திரப்பிரதேசத்தில் எட்டா சிறையில் தண்டனை அனுபவிக்கும் அவர், நுரையீரல் சம்மந்தமான சிகிட்சைக்காக மே 2021 இல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இத்தகவலை நண்பர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார். சரியான நேரத்தில் பகிரப்பட்ட என் நண்பரின் பதிவால், வதந்தியை மேலும் பரப்பாமல் நிறுத்திக்கொண்டேன். அருட்தந்தை ஸ்டான் அவர்கள் அநீதியின் பலியாடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அவர் மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிலோடு கட்டிப்போடப்பட்டிருந்தார் என்பது தவறான தகவல்.
2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வேளையில் திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் டொனால்ட் டிரெம்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்னும் செய்தி சமூக ஊடகங்கள் வழியாக காட்டுத்தீ போல் பரவியது. “டொனால்ட் டிரெம்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆதரவு: அதிர்ச்சியில் உலகம்” என்னும் தலைப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன. பெரும் விவாதப் பொருளான இச்செய்தி, கத்தோலிக்கர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இச்செய்தி முகநூலில் மட்டும் 9,60,000 பார்வை மற்றும் பகிர்வுகளைப் பெற்றது. கூடுதலாக அதைப்பற்றி ஆராய்ந்த போது, திருத்தந்தை அப்படிச் சொல்லவில்லை என்பது நிரூபணமாயிற்று. பத்திரிகை சந்திப்பின் போது, தாம் எந்த அரசியல் போட்டியாளர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்று தெளிவுப்படுத்தினார் திருத்தந்தை. மேலும் அவர், “அரசியல் தேர்தல் பிராச்சாரங்களைப் பற்றி எக்கருத்தும் தெரிவிப்பதில்லை. மக்கள் அதிகாரமே உயர்ந்தது. களம் காணும் போட்டியாளர்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து, இறைவனிடம் வேண்டி, உங்கள் மனசாட்சி படி ஓட்டு போடுங்கள் என்று மட்டுமே கூறுவேன்” எனக் கூறினார். தவறான தகவலானது, WTOES என்னும் நையாண்டி இணையத்திலிருந்து ஆரம்பித்தது என்பது தெரிய வந்தது. உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுக்கதைகளைப் பரப்புவது அவர்களுடைய வியாபாரத் தந்திரமாக இருந்து வருகிறது. உண்மைச் செய்தி வெளிவருவதற்குள் வதந்தி பரவி அமெரிக்க வாக்காளர்களிடேயே குழப்பத்தை ஏற்படுத்தியது. வதந்திகள் தீ போல் பரவும் இயல்புடையவை.
வதந்தி என்றால் என்ன?
பொய்யான தகவல்கள் அல்லது செய்திக் குறிப்புகளை வதந்தி எனலாம். குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக புனையப்பட்டத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் (முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர்) பதிவு செய்கிறார்கள். அரசியல் அல்லது பொருளாதார நோக்கங்களுக்காக மக்களை ஏமாற்றி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். பொய்கள் மெய்க்கு நிகராக இருப்பதற்கான கட்டமைப்பை அதற்குக் கொடுத்துப் பரப்பி விடுகிறார்கள். பாபுராம் சிங் அவர்களின் படமானது, அருட்தந்தை ஸ்டான் சுவாமியை குறிப்பிடும் வகையில் பரப்பியதை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம். டொனால்ட் டிரம்பை திருத்தந்தை பிரான்சிஸ் ஆதரிக்கிறார் என்று சொல்வது இதை விட ஆபத்தானது. இதன் வழியாக அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், தனிநபர், நிறுவனம், அரசியல் கட்சி அல்லது குழு போன்றவற்றின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இக்காலத்தில், வதந்திகள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது எனலாம். பல கோணங்களிலிருந்து வதந்திகள் வந்த வண்ணமாய் இருக்கின்றன. வதந்திகளை பரப்புவதில் அரசியல் கட்சிகள் முன்னின்று செயல்படுகின்றன. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காகவும், சர்ச்சைகளை கிளப்பி அதிலிருந்து ஆதாயம் தேடுவதற்காகவும் பொய்களைப் பரப்புவதையும், உண்மைகளைத் திரித்துக் கூறுவதையும் வாடிக்கையாக்கியுள்ளனர். உணர்ச்சிகளைக் கிளப்பிவிடும் பகிர்வுகளைப் பார்க்கும் மக்களும் அதனுடைய உண்மைத்தன்மையைப் பற்றி ஆராயாமல், பலருக்கு அவற்றைக் குருட்டுத்தனமாகப் பகிர்கிறார்கள்.
பிரச்சாரங்கள் முன்னெடுப்பது வதந்திகளின் இயல்பாக இருக்கிறது எனலாம். பிரச்சாரங்களை குழுக்களோ அரசோ நடத்தலாம். மக்களிடையே கருத்துக்களை திணிப்பதற்காகவும், அவர்களிடையே அபிப்ராயங்களை உருவாக்குவதற்காகவும் அவை முன்னெடுக்கின்றன. செய்திகளில் அடங்கியிருக்கும் உள்ளீடுகளில் பலவற்றை மறைத்து தங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் பரப்பி, முழு உண்மையை மறைப்பதில் அவைகள் வெற்றி காண்கின்றன. இது குழுக்கள் கையாளும் தந்திரமாக இருக்கிறது. பெரும்பாலும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக பரப்பப்படும் இவை, சொந்தக் குழுக்களைச் சார்ந்த அணிகளைத் தங்களோடு விசுவாசமாக வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டுகின்றன. குறிப்பாக, சொந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு எதிராக அநியாயம் இழைக்கப்படுகிறது போன்றவை பரப்பப்படும் போது, அது மக்களைக் கோபம் கொள்ளச் செய்து கொதித்தெழ வைப்பதோடு கலகங்களையும் தூண்ட வழிகோலுகின்றது. அவ்வாறே, மாற்றான் குழுக்களை இழிவுப்படுத்தும் வதந்திகள் தான் சார்ந்திருக்கும் குழுவுக்கு பெருமைச் சேர்ப்பதாக உணரப்படுகிறது. வதந்திகள் கலவரங்களாக வெடிக்கலாம், பொருட்களை சேதப்படுத்தலாம். இதன் வழியாக தாங்கள் சார்ந்திருக்கும் குழுவோடான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளுக்குள் எதிர்மறையானவையும் உணர்ச்சிகளைத் தூண்டத் தக்கதுமான உள்ளீடுகள் இருந்தால் அவை மிக எளிதில் பலரைச் சென்றடைகின்றன. சர்ச்சைக்குரியவற்றைப் பரப்பி மக்களுக்கான பேச்சுப்பொருளாக அவற்றை மாற்றுவதில் வதந்திகளில் ஆற்றல் அடங்கியிருக்கிறது.
வதந்திகள் பற்றியத் திருதந்தையின் கருத்துக்கள்
மக்களை திசைத்திருப்பச் செய்யும் வதந்திகளைப் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டைய தொலைத்தொடர்பு நாளுக்கான செய்தியில் விளக்கினார். உண்மைச் செய்திகளைப் போன்ற தோற்றத்தை உடையனவாக வதந்திகள் இருப்பதால் மக்களின் மனங்களை அவை மிக விரைவில் கவர்கின்றன. பொய்யானதும் நம்பக் கூடியதும் அல்லாததுமான காரியமானது, நம்பத்தக்க முறையில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. வதந்திகளை உருவாக்குபவர்களுக்குத் தீங்கு ஒன்றை உருவாக்கும் நோக்கமானது இருக்கும். அரசியல் ஆதாயங்களுக்காக குழப்பத்தையும் பிரிவினையையும் சிக்கல்களையும் வதந்திகள் மூலம் உருவாக்குகிறார்கள். மக்களின் அன்றாட நம்பிக்கைகளையும், சார்புதன்மையையும் தங்களுடைய மூலதனமாக மாற்றுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தையும், ஏமாற்றங்களையும் இவர்கள் தங்களுடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி அவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஐயத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிறார்கள். மக்கள் குழுக்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை பூதாகரமாக்கி, நல்லுறவுகளைத் தகர்க்கிறார்கள். பொய்யானச் செய்திகளை பரப்புவதற்கான மிகச் சிறந்த, குறைந்த செலவிலான தளமாக சமூக வலைத்தளங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாரபூர்வமான செய்திகளால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வதந்திகள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எங்ஙனம்?
உண்மையின் சார்பாக நிற்பதே, வதந்திகளுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். உண்மை உறவை வலுப்படுத்தும், நன்மையைப் பெருக்கும், பிரிவினைகளையும் சமூக வாழ்விற்கு எதிராக நிற்பவற்றையும் புறந்தள்ளும். உண்மையை அடையாளம் கண்டு அதற்காக நிலைப்பாடு ஏற்க வேண்டுமெனில், நமது இயலாமைகளைப் பற்றியத் சுய அறிவு நமக்கு இருக்க வேண்டும். உண்மை அனைத்தும் நமக்குத் தெரியும் என்னும் ஆணவம் விடுத்து, பிறர் வழியாக நான் உண்மைகளை அறிந்திட இயலும் என்னும் எளிய மனநிலை ஏற்றாக வேண்டும். சொந்த குழுவுக்குள் முடங்கி, அவர்கள் பகிர்வதெல்லாம் உண்மை என்னும் மனநிலை களைந்து, நம்முடைய கருத்துக்களோடு உடன்படாதவர்கள், மற்றும் எதிர் கருத்துக்கள் உள்ளவர்களோடு நட்போடு பழக வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுப்பதோடு, உரையாடலும் மேற்கொள்ள வேண்டும். உண்மைக்கானத் தேடலில், பிறருக்கு அளிக்கும் மதிப்பானது முக்கிய இடம் பெற வேண்டும். குழு விவாதங்கள் மற்றும் உரையாடலின் வேளையில் பிறரைப் பழித்தல், அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்றவை உண்மையைக் கூறுகிறோம் என்னும் பெயரில் முன்னெடுத்தால் அது உண்மையைப் பிரதிபலிப்பதாக இருக்காது என்று திருத்தந்தை கூறுகிறார். உரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் பிரிவினைகளுக்கும் கலகங்களுக்கும் புண்படுத்தல்களுக்கும் வழிகோலாமல், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்னெடுக்க உதவ வேண்டும் என்று தொடர்ந்து கூறும் திருத்தந்தை, அது முதிர்ச்சிமிக்க சிந்தனைகளின் பகிர்வுத் தளமாக அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய முதிர்ச்சியானது செய்திகள் பரப்பப்படும் போதும் பின்பற்ற வேண்டும்.
சிந்தையில் கொள்ள சில
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுபவற்றை பொறுப்புடன் நுகர்வோம். திரித்துக் கூறும் செய்திகள் நம்மை பாதித்து ஏமாறாமல் இருக்க உறுதி கொள்வோம்.
பெற்றுக் கொண்ட செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதை பிறரோடு பகிர வேண்டாம். செய்திகள் உண்மையானவை என ஆராய்வதோடு, அச்செய்தி எங்கிருந்து வருகிறது என்றும் அறிந்து கொள்ளுங்கள்.
சொந்தக் குழுவோடு அளவுமீறிய நம்பிக்கை பிறக்குழுக்களோடான வெறுப்பாக உள்ளில் இருந்து செய்திகளை நோக்கக் காண்கிறதா என சுயம் கேள்வி எழுப்பிக் கொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை வாசிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் உணர்ச்சி வித்தியாசங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். வெறுப்பும், விரோதமும், ஐயங்களும் உருவாக்கி பிரிவினைகளை ஊக்குவிக்கிறதா என சுய ஆய்வு செய்யுங்கள்.
“பொய்களையும் வதந்திகளையும் நீக்குவதற்கு அமைப்புகள் அல்ல அவசியம்; மாறாக பண்படுத்தப்பட்ட நல்ல மனிதர்கள். அத்துமீறிய ஆர்வம் தவிர்த்து, நிதானமாக, பிறர் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, நேர்மையான உரையாடலில் ஈடுபடும் போது உண்மை வெளிவரும். நன்மையின் பால் ஈர்ப்புடையவர்களாக, பொறுப்புடன் செயல்பட்டு நன்மொழியை உரையாடலின் போது பயன்படுத்துங்கள்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.
உண்மையை உரைக்கும் குழுக்களுடன் கரம் கோர்ப்போம்.
0 Comments