எல்லா உயிரும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டேயிருக்கின்றன. சந்திப்புகள் பொதுவாக மனிதர்களிடையே எழும் சந்திப்பு, நமக்கும் இயற்கைக்கும் இடையேயான சந்திப்பு, நமக்குள் வெவ்வேறு அம்சங்களோடும் அதாவது நமது உடல், மனம், ஆன்மா-வோடு உள்ள சந்திப்பு, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனோடு உள்ள சந்திப்பு என வெவ்வேறான சந்திப்புகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. நமது முக்கிய தருணங்கள் எல்லாம் சந்திப்பின் தருணங்கள் தான். எல்லா சந்திப்புகளிலும் முழுமையான உடனிருப்பை உணரும் போது உறவின் நெருக்கத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறோம். மகிழ்ச்சியான சந்திப்புகள் உடனிருப்பு அனுபவத்தைத் தர வேண்டும். எனவே, எத்தனை சந்திப்புகள் இருந்தாலும் அது ஏற்படுத்தும் மாற்றத்தை உடனிருப்பு அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். இந்த பின்னணியில், கீழ்க்காணும் எளிய கட்டுரையில், உடனிருப்பு அனுபவத்தின் அவசியம் என்ன? உடனியிருப்பு அனுபவத்தைப் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைக் காண்போம்.
உடனிருப்பின் அவசியம்
“என் பிரசன்னம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்னும் விவிலிய வார்த்தைகளைப் பல இடங்களில் எழுதியிருப்பதைப் பார்த்திருப்போம். 'எனக்கும் உனக்கும் இடையில் தான் இறைவன் இருக்கிறார்' என்பார் தத்துவயியலார் மார்ட்டின் பூபர். ஆக எத்தனையோ நபரை நாம் சந்தித்தாலும் நமக்கு நெருக்கமானவர்களுடன் அனுபவித்த உடனிருத்தல் உணர்வு இன்றும் மகிழ்ச்சியைத் தந்துக்கொண்டிருக்கிறது. உதாரணமாகக் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டுப்பார்க்கும் போது அறிந்துக்கொள்ளலாம்.
என்னை அதிகம் அன்பு செய்பவர்களின் உடனிருப்பை நான் எப்போதாவது நினைத்து மகிழ்ந்ததுண்டா? நாம் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த பிரபலமானவரின் சந்திப்பிற்கு பிறகு அவரின் உடனிருப்பை நினைத்து, நினைத்து மகிழ்ந்ததுண்டா? நம்மில் இறந்து போன மறக்கமுடியாதவர்களின் சில அனுபவங்கள், உடனிருப்பு நமக்கு ஆற்றலைத் தருவதுண்டா? எனவே உடனிருப்பை முழுமையாக உணரும் போது நம்மில் ஆற்றல் பிறக்கிறது. என்னை அன்பு செய்ய பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. உறவு வலுபெறுகிறது. வாழ்விற்கு அர்த்தம் கிடைக்கிறது. ஒன்றிப்பு உணர்வு வளர்கிறது.
நண்பனின் உடனிருப்பை உணரும் போது நட்பு மலர்கிறது. இறைவனின் உடனிருப்பை அனுபவிக்கும் போது இறைவயுறவு பிறக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே உடனியிருப்பை அனுபவிக்கும் போது குடும்ப உறவு திளைக்கிறது. இதையே எளிமையான ஆன்மீகம் எனலாம். உடனிருப்பின் உச்சக்கட்ட அனுபவம் இறை ஒன்றிப்பை கண்டுணர்வது ஆகும்.
ஆனால் இன்றைய நவீனத்துவத்தின் தாக்கத்தினால் தகவல் தொடர்புசாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக நமக்கு அடுத்திருப்பவரோடு உள்ள தொடர்பை விலக்கி இருக்கவே விரும்புகிறோம். அதிகமான நேரங்களில் இயந்திரங்களோடு பேசுகிறோம், சிரிக்கிறோம், மனதிற்கு நெருக்கமாகவே அதனை வைத்திருக்கிறோம், அதனால் அதிகமாக தனிமை உணர்வும், உறவுகளில் துண்டிக்கப்பட்ட நிலையும், மனநல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இக்காரணங்களால் பெருகி வரும் மனநோயாளிகளின் எண்ணிக்கையும் உண்மையான உடனிருப்பு அனுபவம் பெறாததால் ஏற்படுபவைகள்.
சில உதாரணங்களாக..
பேருந்திலோ, புகைவண்டியிலோ பயணம் செய்யும் போது அருகில் இருப்பவரோடு முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவோம். இப்போது அதிகமாகச் செல்போனிலே மூழ்கிவிடுகிறோம்.
தினம் தினம் நம் வீடுகளில் சேர்ந்து உணவருந்திய காலம் மாறி இப்போது இயந்திரங்களோடு சேர்ந்து சாப்பிட பழக்கப்பட்டுவிட்டோம்.
உடனிருப்பை அனுபவிக்காத போது பலரும் நம்மோடு இருந்தாலும் 'என்னை அன்புசெய்ய யாரும் இல்லை' என்ற உணர்வு தான் மேலோங்கி நிற்கும். ஆகவே இறைசமூகத்திலும், குடும்பத்திலும் ஒவ்வொருவரும் தனது முழுமையான உடனிருப்பை வெளிப்படுத்தும் போது மகத்தான மதிப்பு உருவாகிறது, ஏற்றுக்கொள்ளுதல் வளர்கிறது. பிறருடைய உடனிருத்தலை உணராத நேரத்தில் நமது பிரசன்னத்தையும் நாம் உணரமுடிவதில்லை.
இறைவனின் உடனிருப்பு
கடவுள் தனது இருத்தலை, உடனிருப்பை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அவரது இருத்தலின் வெளிப்பாடே அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதாகும். இதை வெறும் புறநிலை செயல்பாடுகளான சடங்குகள் மற்றும் அருட்சாதனங்கள் மூலமாக உணர்கிறோம். இதையும் கடந்து அகநிலை இருத்தலை நம் உள்ளத்தில் உணரும் போது இறைவெளிப்பாட்டையும் இறையாற்றலையும் உணர்கிறோம்.
'கடவுள் மனிதரைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்.' என்பார் ஆபிரகாம் லிட்சேயேல். தேடுதல் கடவுளின் பணியாக இருந்தாலும், தேடும் கடவுளை சந்திப்பதும், அவரது உடனிருப்பை உணர்வதும் நமது அழைப்பாகும். மேலும் கடவுள் மனிதரைப் படைக்கும் போது தனது சாயலிலும் தெய்வ சாயலிலும் படைத்தார். இதுவே அவர் நம்முள் உறைந்திருக்கும் உடனிருத்தலின் வெளிப்பாடு ஆகும்.
இயேசு தனது இருத்தலை மனித உடலெடுத்தல் வழியாக வெளிப்படுத்தினார். அதில் இறைத்தந்தை எப்போதும் நிலையான பிரசன்னமாக இருக்கிறார். நாம் அதிகமாகக் கடவுளின் இருத்தலில் தொடர்ந்து அனுபவிப்பதும் வாழ்வதும் அவருடைய இருத்தலைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்வதும் அவரது இருத்தலோடு தொடபுக்கொள்வதற்காகக் கிடைக்கும் வாய்ப்புளைப் பயன்படுத்துவதும் இறை அனுபவத்தில் வளர உதவும். இவற்றிக்கு நாம் பயன்படுத்துகின்ற புனித பொருட்களும், புனித தலங்களும், வழிபாடுகளும் இறைவனின் உடனிருப்பு அனுபவத்தில் வளர துணை செய்கின்றன. அதையே எளிய வழியில் நல்லுறவுகள் மூலம் அன்றாடம் அனுபவிக்கிறோம்.
நிகழ்காலத்தில் வாழ்தல்
இறைவனின் உடனிருத்தலில் வளர முக்கியமானது நாம் நிகழ்காலத்தில் வாழ்வதாகும். “தற்போதைய கணத்தில் வாழும் உங்களது உறவுவாழ்வே வாழ்க்கையின் மிக முக்கியமான உறவு. அதுவே இப்போதைய சக்தி" என்கிறார் எக்கார்ட் டோலே. எனவே ஆழமான விழிப்புணர்வோடு இக்கணத்தில் வாழும் போது நமது இருப்புக்கான மரியாதையும் இருக்கும்.
ஒரு கதை ஒன்று உண்டு - ஒரு இளம் மீன் தன்னுடன் வாழ்ந்த ஒரு ஞானமிக்க மூத்த மீனிடம் ஒரு கேள்வி கேட்டது. நான் கடலைப்பற்றி கேட்டிருக்கிறேன் அது எப்படி இருக்கும், அது எங்கே இருக்கிறது?
அதற்கு அந்த மூத்த மீன் இளம் மீனிடம் ஒரு புன்முறுவலுடன் சொன்னது. கடல் உனக்குள் தான் உள்ளது. நீயும் அதனோடு தான் இருக்கிறாய். அது உனக்கு எப்போதும் தெரிந்ததே. ஆனாலும் நீ அதை அறியவில்லை .
இக்கணத்தில் வாழ தொடர்ந்த விழிப்புணர்வும், குவிந்த கவனமும், கலப்பில்லாத கவனமும் தேவை. நான் நிகழ்காலத்தில் வாழப்பழகும் போது எனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் முழுஈடுபாடு பிறக்கிறது. பிறரிடம் காணப்படும் நல்ல நம்பிக்கைகள், கருத்துக்கள், சிந்தனைகள், செயல்பாடுகள், திறந்த மனத்தோடு உள்வாங்க முடிகிறது. நிகழ்காலத்தைத் திறந்த உள்ளத்தோடு அணுகும் போது வாழும் தருணத்தில் பிறரை நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்கின்ற மனநிலையும், அவர்களோடு இணக்கமாக ஈடுபடுகின்ற திறனையும் பெறுகின்றோம். நிகழ்காலத்தில் வாழ்தல் என்பது நம்பிக்கையின், அங்கீகரித்தலின் செயல்பாடு. இதுவே நாம் அனைவருக்கும், எல்லா சூழ்நிலைக்கும் கொடுக்கின்ற மிக சிறந்த கொடையாகும்.
நிகழ்காலத்தில் வாழ மூன்று வழிகள்
கடந்த காலத்தில் நடந்தவைகள் எல்லாம் வரலாறு. நாளை என்பது நம் கையில் இல்லை. இன்றைய பொழுதே நிஜமானது. ஆகவே நிகழ்காலத்தில் வாழ மூன்று முக்கியமான மனநிலைகள் அவசியம்.
சுயவிழிப்புணர்வு - இது நான் இக்கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன். என்ன சிந்திக்கிறேன், உணர்கிறேன் என்பதாகும். இது ஒரு தொடர் தேடல், முயற்சி.
நடந்தவைகளையும் நடக்ககூடியதையும் நேர்மறையோடு எதிர்கொள்ளும் மனநிலை.
கடந்தகால கசப்புணர்வுகளை மன்னிக்க முயற்சித்தல்
எனவே இவை மூன்றையும் கடைபிடிக்கும் போது இறைவனோடு கொண்டுள்ள மேன்மையான உடனிருப்பை நமக்கு நெருக்கமானவர்களின் உடனிருப்பு அனுபவத்தில் பெறுலாம்.
இறுதியாக
நமது வாழ்வில் எல்லாமே நம்மை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அதன் உடனிருத்தலை நாம் தான் முழுமையாக கண்டுணர்வதில்லை. நாம் காணும் எல்லாவற்றிலும் இறைவனுடைய உடனிருத்தலை உணர்ந்து அவருடைய கண்களால் பார்ப்பது ஆன்மீகத்தில் வளரவும், அதில் முதிர்ச்சி காணவும் உதவும். நான் கடவுளின் இருத்தலை எப்படி காண்கிறேனோ அதுபோலவே அவரும் என்னைப் பார்க்கிறார். ஆகவே கடவுளின் உடனிருப்பை குடும்பத்திலும் சமூகத்திலும் நம்மோடு வாழ்பவர்கள் மூலமாக முழுமையாக உணர்வோம். அதுவே வாழ்விற்கு அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் தரும். அதுபோல நம்முடைய உடனிருத்தலால் நம்முடன் வாழ்பவர்களுக்கு ஆற்றலை, சக்தியை, வாழ்வின் அர்த்தத்தை கொடுப்போம்.
0 Comments