“ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தும் குடும்பம் ஒன்றித்து வாழும்!" என திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 11, 2015 நாளன்று கூறியது இன்றும் நமது குடும்பங்களுக்குப் பொருந்தும். “உணவு வேளைதான் நம்மை ஒன்றிணைக்கும் புனித நேரம்” என திருத்தந்தை வத்திக்கான் தூய பேதுரு ஆலய சதுக்கத்தில் குழுமிய மக்களிடம் பேசியது உலகளாவிய குடும்பங்களின் உறவைப் பலப்படுத்தும் அறிவுரை.
“உணவு வேளைகளில் தொலைக்காட்சி நிகழ்வுகளில் மூழ்குவதும், மடிக்கணினி அல்லது திறன் பேசிகளைப் பயன்படுத்துவதும் உறவுச் சூழலுக்கு ஊறு விளைவிப்பவை” என எச்சரிக்கை விடுத்ததை கிறிஸ்தவக் குடும்பங்கள் பின்பற்றுவது சாலச்சிறந்தது. குடும்பம், குறிப்பாக குழந்தைகள், தமது நுண்மின் கருவிகளோடு உணவு மேசையில் அமர்வது கோவிலாகத் திகழவேண்டிய குடும்பத்தைத் தின்பண்டங்களை விற்பனை செய்யும் உணவகங்களாக மாற்றிவிடுகின்றன. அவ்வப்போது - தேவைப்படும்போது - வந்துபோகும் விடுதிகளாக வீட்டை இத்தகைய செயல்பாடுகள் மாற்றிவிடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம்.
உண்பது புனித நிகழ்வு
உணவு மேசையில் ஒருவர் ஒருவரோடு முகங்கொடுத்துப் பேசி உணவைப் பகிர்வது புனித நிகழ்வு. சமைத்த உணவு அவசரம் அவசரமாக உண்பதற்கானது அன்று நம் இல்லங்களில் நாம் அழகுற அமைக்கும் உணவறைகள். அன்றைய நாளுக்கான திட்டங்களைப் பகிரும் இடம்; இரவு நேரமெனில், அன்றைய அனுபவங்களைக் கேட்டு மகிழும் அல்லது பாராட்டும் இடம். மகிழ்வான நிகழ்வுகள் மட்டுமன்று அன்றாட அனுபவங்கள். அவை பல்வகை உணர்வுகளை உள்ளடக்கலாம்.
அறுசுவை உணவைப்போன்று அனுபவங்களும் சுவையானவைகளாக இருக்கலாம்; சுமையான இடர்களாகவும் அமையலாம்; சவால்கள், சாதனைகள், எதிர்பார்ப்புகள், ஏளனங்கள், தோல்விகள், வெற்றிகள் என அனுபவச் சுவைகள் பல தரப்பட்டவை. இவற்றை நம் குடும்ப உறுப்பினரோடு பகிர்வது நம் புனிதக் கடமை. உறுப்பினர் ஒருவரால் மனந்திறந்து பேச இயலாத மவுனத்தையும் ஆதரவோடு கேட்டு அறிவதுதான் அன்பு. கண்களில் நீர் மல்க பேச இயலாமல் பாதியில் நிறுத்தும்போதும் மொத்த குடும்பமும் வார்த்தைகளில்லாது தம் உடனிருப்பை உறுப்பினருடன் உறுதிசெய்வதுதான் உள்ளார்ந்த உறவு. இதற்கு எவ்வித மின்னுபகரணங்களும் தடையாக நிற்காமல் பார்த்துக் கொள்வதுதான் குடும்ப நல்லுறவை அதிகரிக்கும், ஆழப்படுத்தும், இனியதாக்கும், ஈடுபட வைக்கும், உடனிருக்கவும் செய்யும் (காண்: அன்பின் மகிழ்ச்சி , எண்: 30). உணவு மேசையிலிருந்து திருப்பலிப் பீடம் இயேசுவின் உணவுப் பகிர்வினை திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுதாரணமாக முன்வைத்து விளக்குகிறார். இறையாட்சியின் தொடக்கம் இயேசுவின் உணவுப் பழக்கம். இதை நாம் நான்கு நற்செய்திகளிலும் பார்க்கிறோம். பரபரப்புடன் உணவை முடிக்காமல், பாசம் பகிர்ந்து, படிப்பினைகளை இயேசு பரப்பிய இடம் உணவு மேசை. உணவிற்கு எவ்வளவு சிறப்பெனில், இயேசு சீடர்களோடு பகிர்ந்த இறுதி இராவுணவு வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது; வரலாறாக கிறிஸ்தவரின் வாழ்வைத் தொடர்ந்து வளப்படுத்துவது. இதையே திருத்தந்தை குடும்பங்களுக்கும் நற்கருணைக்குமான தொடர்பாகச் சித்தரிக்கிறார். எவ்வாறு நற்கருணை விண்ணக விருந்தின் முன்னடையாளமாகத் திகழ்கிறதோ அதற்கேற்பவே குடும்ப உணவும் நற்கருணை அருட்சாதனத்தின் அடையாளமாகவும் தொடர்ச்சியாகவும் காட்டப்படுகிறது. குடும்ப ஆன்மீகம் இவ்வாறு உணவால் ஆழப்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. குடும்ப மேசையிலிருந்து நற்கருணைப் பீடத்திற்கும் திருப்பலியின் திருவிருந்திலிருந்து குடும்ப மேசை உணவிற்கும் நெருங்கிய தொடர்பை நாம் காண்கிறோம்.
இல்லற வாழ்வின் இன்சுவை
“அன்பின் மகிழ்ச்சி” - குடும்ப அன்புபற்றி திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ள திருத்தூது ஊக்கவுரை - இல்லற வாழ்வின் இன்சுவையை உணவோடு ஒப்பிடுவதை எண்கள் 09 மற்றும் 14 விவரிக்கின்றன. “விருந்துண்ணச் சுற்றி அமர்ந்திருக்கும் அமைதியான இக்குடும்பத்தின் வாயிலைக் கடந்து உட்செல்வோம்" எனவும், “இல்லத்தில் உண்ணும் இடத்தில் கணவனும் மனைவியும் அமர்ந்திருக்க, குழந்தைகள் ஒலிவக் கன்றுகளைப்போல்” (திபா 128: 3) உயிர்த் துடிப்பும் ஆற்றலும் நிறைந்தவர்களாய் அவர்கள் அருகில் இருப்பர்” என்றும் குறிப்பிடுகின்றன. இங்ஙனம் உணவு அருந்தும் இடம் எவ்வாறு ஆற்றல்படுத்துகிறது என்பதையும் வாசிக்கிறோம்.
உணவின்றி உறவில்லை
உணவுதான் உணர்வுள்ள உறவை வளர்க்க உதவுகிறது. இது மேலை நாடுகளுக்குத்தான் பொருந்தும்; நமக்கு இது ஒத்துவராது என நாம் நினைக்கலாம். இது தவறான கண்ணோட்டம். உலகின் எல்லா சமூகங்களும் உணவை உறவின் வெளிப்பாடாகவும் உறுதிப்பாடாகவுமே பகிர்கின்றன. எனவே, விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ் சமூகத்திற்கும் உணவுப் பகிர்தல் உறவை வளர்க்கும் காரணி என்பதை நினைவில் நிறுத்துவோம். இதை நடைமுறைப்படுத்த நமது குடும்பங்கள் கடைப்பிடிக்கத் தகுந்த ஒருசில நடைமுறைகள்.
- உணவு தயாரிக்க ஒத்துழைத்தல்; யாவரும் பங்கேற்றல்.
- உணவு மேசையை அழகுபடுத்தல்; எல்லா நாட்களும் செய்யலாம்.
- உணவுப் பண்டங்களைக் கலை நயத்துடன் மேசையில் அடுக்குதல்.
- உணவிற்குமுன் கரங்களைக் கோர்த்து செபித்தல் - பாடுதல்.
- நாளுக்கு ஒருவர் என பொருத்தமான விவிலியப் பகுதிகளை வாசித்தல்.
- குடும்பத் தலைவர் அல்லது தலைவி அனுபவப் பகிர்வைத் துவக்குதல்.
- உணவு அருந்தியவாறே அனுபவங்களைப் பகிர்தல்.
- உணவு சமைத்தவரை உளமாரப் பாராட்டுதல்.
- பகிர்வின் அடிப்படையில் இறுதி செபம் எழுப்புதல்.
- பாத்திரங்களைக் கழுவ உதவுதல்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை ஒருசில வழிமுறைகளே தவிர விதிமுறைகள் அல்ல. ஒவ்வொரு குடும்பமும் தமக்கான வழிமுறைகளைப் படைப்பாற்றலுடன் பின்பற்றுவதே நிலைத்த பலன் விளைவிக்கும். இப்படிச் செய்தால்தான் முறை என்பதில்லை; இணைந்து உண்பதும் அவரவர் அனுபவங்களைப் பகிர்வதும் குடும்ப ஆன்மீகத்தின் அடிப்படைகள் என்பதை மனதில் கொண்டால், வழிமுறைகள் தாமாகவே வடிவெடுக்கும்.
0 Comments