இயேசுவே!
நேற்றைய தினம் நான் ஒரு சினிமா பார்த்தேன். தன்னுடைய கனவு வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையைக் கொல்லும் கதாபாத்திரம் அத்திரைப்படத்தில் இடம் பெற்றது. தன்னலத்திற்காக குழந்தையைக் கொல்வதைப் பலரும் கொண்டாடுவதைப் பார்த்த போது எனக்கு குலை நடுங்குவதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.
குழந்தைப் பாக்கியத்திற்காக பல ஆண்டுகளாக ஏங்கித் தவிக்கும் பலத் தம்பதியர்களின் முகங்களை அத்திரைப்படம் எனக்கு நினைவூட்டியது. ஒன்பது ஆண்டுகளாக தவமாய் தவமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட தம்பதியரை நான் அறிவேன். குழந்தைக்காக அவர்கள் ஏறெடுத்த வேண்டுதல்கள் எதுவும் கேட்கப்படாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் இயேசுவே, உமது திருவுளம் அதுவாக இருக்கவில்லை. அவர்கள் நீண்ட காலம் காத்திருந்த குழந்தையானது ஏழு மாதங்களில் பிறந்தது. அக்குழந்தையைக் காப்பாற்ற பல மருத்துவர்களும் செவியியர்களும் முயன்றனர். ஆனால், நீர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டீர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நம்பிக்கை இழக்காத அவர்கள் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டனர். எல்லா நாட்களும் தவறாமல் திருப்பலியில் பங்கேற்று செபித்தார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. தேவதை போல ஒரு குழந்தை. அவர்கள் குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டில் யார் வந்தாலும் அக்குழந்தையைக் காட்டி ‘நாங்கள் நீண்ட ஒன்பது ஆண்டுகாலம் தவமிருந்து செபித்து இயேசுவிடமிருந்துப் பெற்றுக் கொண்ட அவருடைய குழந்தை’ எனக் கூறி பெருமிதம் கொள்கின்றனர்.
இயேசுவே, எத்தனையோ பேர் குழந்தைக்காக தவமிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் சிலரோ நீர் கொடுத்த குழந்தையை வேண்டாம் எனக் கூறி கொன்று விடுகிறார்கள்.
நீர் உருக்கொடுத்து உருவாக்கும் ஏராளமான குழந்தைகள், தாயின் கருவில் வைத்தே கொல்லப்படுகின்றன. செய்தித்தாள்கள், கொலை, இனப்படுகொலை எனச் நிரம்பி வழிகின்றன. இயேசுவே இங்கே என்ன நடக்கிறது? இச்செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனிதர்கள் ஏன் சக மனிதர்களைக் கொல்கிறார்கள்? இச்செயல்களை முடிவுக்குக் கொண்டு வர என்னதான் வழி? கருக்கலைப்புக்கு மனிதர்கள் எவ்வித மன உறுத்தலுமின்றி துணை போகின்றனர். மனித உயிரை மனிதர்கள் துச்சமாக எண்ணக் காரணம் தான் என்ன? எனக்குப் பயமாக இருக்கிறது. இயேசுவே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
இயேசு
அன்பு மகளே! நானும் இக்காரியத்தைப் பற்றி நினைத்துப் பெரிதும் கவலைப்படுகிறேன். சக மனிதரின் உயிர் பறிக்கும், சாத்தானுக்குரிய இயல்பானது பரவி வருவதை நான் காண்கிறேன். மனித மனங்கள் உலக சுகங்களில் மூழ்கிக் கிடக்கிறது. தனக்கு இன்பம் மறுக்கும் அனைத்தையும் மனிதர்கள் அழித்து வருகின்றனர். திருவிவிலியத்தில் நாம் காணும் காயீனைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த சாத்தான் இக்கால கட்டத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். விலக்கப்பட்ட பேராசையின் கனியை மீண்டும் மீண்டும் மனிதர்கள் பறித்து உண்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுகளை நாம் கண்ணாரக் கண்டு வருகிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் மிகுந்த கவனத்துடன் உருக்கொடுத்து இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கிறேன். “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5) என இறைவார்த்தைக் கூறுவது எனது மகளே மிகவும் அர்த்தமிக்கது. ஒவ்வொரு குழந்தையும் அளப்பரிய இறைத்திட்டங்களையும் விருப்பங்களையும் சுமந்து உலகில் பிறக்கிறது.
ஆனால் அவர்களை கருவில் வைத்தேக் கொன்று விடுகின்றனர். அவர்கள் பிறந்திருந்தால், இன்று மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்கள் நிலவி இருக்காது. துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அன்றாடம் கொல்லப்படுகின்ற குழந்தைகள் வழியாக கடவுளின் திட்டமானது உதாசீனப்படுத்தப்படுகிறது. இக்கொடுஞ்செயலை மனிதர்கள் வெகு எளிதில் நடத்திவிடுகிறார்கள். கொலைகள் இன்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மானிட உயிரும் எனது சாயலைச் சுமந்த வண்ணம் உலகிற்கு வருகிறது. அவர்களைக் கொல்லும் போது, எனது திட்டமானது எதிர்க்கப்படுகிறது. ஆனால் எனது திட்டங்களை எதிர்ப்பது சாத்தியமல்ல என்பதை மானிடர் அறிவர். தீமை பெருகும் போது, அத்தீமைகளை அகற்றும் நோக்குடன் ஏராளமான புனித ஆன்மாக்கள் தோன்றி தங்கள் தியாகச் செயல்கள் வழியாக உலகில் சமநிலையைக் காக்கின்றனர். அவர்கள் எனக்காக வெற்றிகளைக் கொணர்கிறார்கள். ஒருபுறம் குழந்தைகள் கருவிலே அழிக்கப்படும் போது, மறுபுறம் ஏராளமான புனிதர்கள் பிறரின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தங்களையே பலியாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னைச் சுற்றி வாழ்பவர்களைப் பார். வாழ்வில் எண்ணிலடங்கா வேதனைகளையும் வலிகளையும் அனுபவிப்பவர்கள், என்னோடு இணைந்து செயலாற்றுகிறார்கள் என்பதை நீ அறிய வருவாய். அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் துன்பங்கள் மற்றவர்களின் பாவமன்னிப்புக்கும் மீட்புக்கும் ஏதுவாக அமைகின்றன. மற்றவர்கள் வாழ்வில் துன்பங்கள் வரும்போது, என்னை விட்டு விலகி ஓடுவர். தியாகம் என்னும் நெருப்பில் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, வாழ்வை நிரந்தரமாக எனக்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களின் மூலம், இவ்வுலகமானது எனது இரக்கத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திருவிவிலியம் திறந்து வாசித்துப் பார். மீட்பின் வரலாற்றில் துன்பங்கள் அதன் பகுதியாக இருந்திருக்கிறது. தங்கள் வாழ்வை புதுப்பித்துக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காக தனி மனிதர்களும், மக்களினங்களும் வேதனை அனுபவிக்கிறார்கள். பாரவோனின் மனம் கடினமாக மாறிக் கொண்டிருந்ததைப் போன்று பலரின் உள்ளம் கடினமாக மாறிக் கொண்டிருக்கிறது. இறைத்திருவுளத்தை ஆராய்ந்து அறியவும் அதன்படி செயல்படவும் அனுமதியாமல் சாத்தான் அவர்களின் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்குச் சுதந்திரம் என்னும் கொடை அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்காக நான் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது. அவர்களுடைய உள்ளங்களை என்னால் தூண்டி எழுப்ப முடியும். ஆனால் தீர்மானங்களை அவர்களே எடுக்க வேண்டும். ஏராளமானவர்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி என்னை அன்பு செய்வதால் அவர்களால் இவ்வுலகில் வைத்தே விண்ணரசின் இன்பத்தைக் காண முடிகிறது. ஆகையால் தான் புனித பவுல், “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி 1:21) என்றார். எல்லாவற்றிற்கும் நிறைவாக எனது இரண்டாவது வருகை அமையும். அப்போது, தீமையையும் அதன் சக்திகளையும் என்றென்றைக்குமாக அழியா நரகத்தில் தள்ளுவேன். அவ்வாறு அனுப்பும் போது, எந்த மனிதரும் அழியா நரகத்திற்குச் செல்லக்கூடாது என்று நான் விரும்புகிறேன்; அதற்காகவே நான் காத்திருக்கிறேன், நான் முயல்கிறேன். நீ தொடர்ந்து வேண்டுவாயாக. உனது இதயத்தைத் தீமையில் சிக்க வைக்கும் நோக்குடன் சாத்தான்கள் கழுகைப் போன்று உன்னைச் சுற்றிப் பறந்து திரிகின்றன. புனித வாழ்வை நேசி, அதை அடைய நிரந்தரமாக முயற்சி செய். புலன்களால் வரும் ஆசைகளை அடக்கி, இவ்வுலகம் விளம்பும் இன்பங்களை புறந்தள்ளினால், பாவத்தை விட அன்பை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உனக்குக் கிடைக்கும். குழந்தாய் நான் உனக்காக ஏராளமான அருட்கொடைகளைப் பொழிந்து கொண்டிருக்கிறேன்.
0 Comments