வாழ்க்கையை வெகு தொலையிலிருந்துப் பார்க்கும் போது அது மகிழ்ச்சிகரமானது. ஆனால் அருகிலிருந்துப் பார்க்கும்போது மிக மிகத் துயரங்கள் நிறைந்தது. நாசரேத்தில் வாழ்ந்த யோசேப்பு, மரியா, இயேசு குடும்ப வாழ்வு முறையை மேலோட்டமாகப் பார்த்தால் அது அன்பான, கரிசனையான, உண்மையான, பக்தியான, நலமான, மகிழ்ச்சியான குடும்பமாக நம் கண்களுக்குத் தோன்றும். அதே குடும்பத்தைக் கூர்ந்து நோக்கினால் அம்மூவரும் எதிர்கொண்டத் தடைகள், தடுமாற்றங்கள், சவால்கள், சிக்கல்கள், துயரங்கள் ஏராளம் என நாம் ஓரளவேனும் புரியலாம். அதிலும் குறிப்பாக திருக்குடும்பத்திற்குத் தலைமையேற்ற யோசேப்பு இடைவிடாது சந்தித்தச் சங்கடங்கள் சவால்கள் சொல்லி முடிக்க முடியாது.
நம் குடும்பத் தலைமைகள்
திருக்குடும்பத்தை பொறுப்பேற்று வழிநடத்திய யோசேப்புவைப் போலத்தான் நம் குடும்பப் பொறுப்புகளைத் தூக்கித் தோளில் சுமக்கும் குடும்பத் தலைவர்கள் என்றால் அது மிகையாகாது. குடும்பம் எனும் தேர்தனை தம் பலமெல்லாம் சிந்தி இழுத்துச் செல்லும் குதரையைப் போலச் செயலாற்றும் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் போற்றத் தகுந்தவர்கள். கோவில் சாமி ஆக்கி கும்பிட்டு வாழ்த்தத் தகுந்த தெய்வப் பிறவிகள். தங்கள் உழைப்பாலும் - உடனிருப்பாலும், கனிவாலும்-கண்டிப்பாலும், திடத்தாலும்-தியாகத்தாலும் கண் காணும் கடவுளாய் உருகி ஒளிரும் ஒப்பற்றச் செம்மல்கள்.
அதேவேளையில், உயித்துணையான மனைவியையும் பிள்ளையையும் மறந்து மனம்போல் திரியும் மனசாட்சியற்றக் குடும்பத் தலைவர்கள் நமக்குள் உண்டு. போதையால் வாழ்வுப் பாதைத் தடுமாறி குடும்பத்தைவிடக் ‘குடியே’ தஞ்சமெனக் கொண்டவர்கள் ஒருபுறம். அகங்காரம், ஆணாதிக்கத்தை ஆடையாக்கி அன்றாட இல்லச் செலவுகள் எதையும் கண்டுகொள்ளாமல் குடும்பத்தை அடித்து துவைத்துவிட்டு அரசியல், சமூக, சமய அரங்குகளில் தான் ஓர் அசாத்தியமான ஆள் என அசத்தும் இம்சை வாதிகள் இன்னொரு புறம். மனைவியும் மக்களும் தான் போடும் கோட்டுக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டும். தனது பிரமாணிக்கத்தை எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற வரட்டு தத்துவத்தோடு வாழும் கபடதாரிகள் எனப் பலரை நம் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் நாம் பாராமல் இல்லை.
மதிப்பீடுகள் சொத்து
குடும்பத் தலைமைதனை ஏற்று வாழும் எல்லாருக்கும் மாதிரியாகத் துலங்குபவர் யோசேப்பு. அவரது கரிசனை மனம், கண்ணிய உணர்வு, பெண்ணிய மதிப்பு, கடவுள் பற்று, நீதி மீதானத் தாகம், நேயமிகு அணுகுமுறை, பொறுப்பான பொறுமை, எதார்த்தமிக்க எளிமை எனச் சுடரும் மதிப்பீடுகள்தாம் அவர் தன்னகம் கொண்டிருந்த மதிப்பிடவியலா பெரும் சொத்துகள். இம்மதிப்பீடுகள் ஒவ்வொரு குடும்பத்தலைமைக்கும் தேவையான திரவியங்கள். தேடி மனம் சேர்க்கவேண்டிய மாணிக்கங்கள். அளவிலா அறமதிப்பீடுகள் அகமேந்தி வாழ்ந்த யோசேப்புவின் மீட்பர் காப்புப் பயணத்தில் மின்னி நின்ற மூன்று மதிப்பீடுகளை குடும்பத் தலைமைகளுக்கென இங்கே ஒளிரச் செய்ய விழைகிறேன்.
1. அர்ப்பணத்திலும் அடிபிறழாமை
ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்த இளநங்கை மரியாவை சந்தித்து வானதூதர் கபிரியேல் அவர் கருத்தாங்கி பெற்றெடுக்கப் போகும் குழந்தையைக் குறித்து ஒரு பெரிய பட்டியல் இட்டார். இயேசு எனும் பெயர் தாங்கும் அவர் பெரியவராயிருப்பார். அவர் உன்னத கடவுளின் மகன். தாவீதின் அரியணையைப் பெறுபவர். யாக்கோபின் குடும்பத்தை ஆள்பவர். முடிவில்லாமல் ஆட்சி செய்பவர் (லூக் 1: 31-34) எனச் சொல்லப்பட்ட நிலையில் அக்குழந்தையைப் பெற்றெடுக்க இடமின்றித் தவித்தனர் (லூக் 2:7). அக்குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரத்தில் உடனிருந்து உதவிட எவருமில்லை. பெற்றெடுத்தபின் கிடத்தத் தீவனத்தொட்டித்தான் கிட்டியது. ஆயினும் யோசேப்பு அடிபிறழவில்லை.
பிறந்தக் குழந்தை “தூய ஆவியால்” கருத்தாங்கப்பெற்றது (மத் 1:18). “கடவுளின் ஆசி பெற்றது” (லூக் 1:42). “உன்னத கடவுளின் இறைவாக்கினர்” (லூக் 1:76). செக்கரியாவால் “விண்ணின் விடியல்” (லூக் 1:73) என தெரிவிக்கப்பட்டது. மெசியாவாக, மீட்பராக அக்குழந்தை அறிவிக்கப்பட்டாலும் சமூகத்திலும் சமயத்திலுமிகுந்த வழக்கமான சட்ட முறைமைகளை யோசேப்பு மிகக் கவனமாகப் பின்பற்றினார். அவை:
குழந்தை பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனத்திற்காக கோவிலுக்குக் கொண்டு சென்றது,
இயேசு எனப் பெயர் சூட்டியுது,
இரு புறாக்குஞ்சுகளை அர்ப்பணித்தது (லூக் 2:24) போன்ற நிகழ்வுகளில் வெளிப்பட்டது.
இன்று சமூகத்தில் தாம் வகிக்கும் ஒரு சிறு பணிநிலையைப் பெரும்பதவி எனப் பிரச்சாரமிட்டு நாடும் வீடும் தன் விரலின் அசைவுக்கு தவமிருப்பதாகத் தம்பட்டமிடும் அநாகரிக அலங்கோலப் போக்கு அரங்கேறுகிறதல்லவா? குடும்ப-குழுமத் தலைமையில் அங்கம் வகிப்போர் செய்யும் அடாவடித்தனம், அத்துமீறல், அதிகாரத்துஷ்பிரயோகம் அலைபோலத் தொடர்கிறதல்லவா? தங்கள் பணிநிலைகளைத் தக்க வைக்க என்னே பகட்டு-வாக்குறுதிகள், எத்தனை அடியாட்கள்-அடிதடிகள், எவ்வளவு பண-நேர விரயங்கள்... திருக்குடும்பத்தின் தலைவரான யோசேப்புக்கும் நம் தலைமைகளுக்கும் இருக்கும் இடைவெளிக் கணக்கிட முடியுமா?
2. தடுமாற்றத்திலும் தளராமை
யோசேப்பு ஆண்டுதனைக் கொண்டாடப் பணித்த நம் திருத்தந்தை பிரான்சிஸ் தம் திருமடலில், ‘இன்றைய உலகிற்கு முதலாளிகள் அல்ல, தந்தையரே தேவை’ எனத் தம் தேடலை மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல, அர்ப்பணமிக்கத் தந்தையின் இதய உணர்வு யோசேப்புக்கு இருந்தது. அதனைத் தாம் எதிர்கொண்ட தடுமாற்றங்களில் தடம்பிறழாது கடைப்பிடித்தார்.
திருமண ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டிருந்த மரியா தன்னோடு கூடி வாழும் முன் கருவுற்றிருந்ததை அறிந்து திகைத்தார் யோசேப்பு (மத் 1:18). அத்தடுமாற்றத்திற்குக் கனவு வழியாகத் தெளிவு பெற்று மரியாவை ஏற்றார். குழந்தை கொல்லத் தேடப்படுவதை அறிந்து கலங்கினார். உடனே எகிப்துக்குத் தப்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டதை ஏற்று இரவோடு இரவாகப் புறப்பட்டார் (மத் 2: 13-14). மீண்டும் எகிப்திலிருந்து இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும் தூது கேட்டு அவ்வாறே செயற்பட்டார் (மத் 2:19-20). அங்கிருந்து கலிலேயா, நாசரேத்து என ஒருவித நாடோடி வாழ்வு நடந்தேறியது.
நாடாள வந்த மீட்பர் நாடோடி ஆக்கப்பட்டாரே, இவர் உண்மையிலேயே மீட்பர்தானா? இது இறைத் திருவுளம்தானா என யோசேப்பு கேள்வி எழுப்பிக்கொண்டு பதுங்கி இருக்கவில்லை. மாறாக, அவர் பணிவோடு செயல்பட்டார். தான் எதிர்கொண்டத் தடைகள், தடுமாற்றங்கள், அகத்துள் நிகழ்ந்தாலும் புறத்தே நடந்தாலும் தளராமல் தாண்டிச் சென்றார். தலைமை நிலைகளில் இருக்கின்ற எல்லாரது வாழ்விலும் இத்தகு தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அத்தகு தடுமாற்றச் சூழலில் நமக்குத் தேவை யோசேப்பின் தளரா மனநிலை.
3. இழப்பிலும் இதய உறுதி
பன்னிரு வயது நிரம்பிய ஒவ்வொரு யூதரும் எருசலேம் கோவில் சென்று தம் பெயரைப் பதிவு செய்வதோடு மோசே வழங்கிய சட்டங்களின்படி ஒழுக வேண்டும் என்பது யூத நியதி. யோசேப்பின் குடும்பம் தாங்கள் வாழ்ந்த சமூகத்தின் மரபுகளை வழுவாமல் பின்பற்றியது என்பதற்கான சான்றுதான் லூக்கா 2:42. திருக்குடும்பம் எருசலேம் விழாவுக்குச் சென்று திரும்பிய போது சிறுவன் இயேசு தங்களோடு இல்லை என்பதை யோசேப்பும் மரியாவும் உணர்ந்தனர். எனவே மீண்டுமாய் எருசலேம் சென்று மூன்று நாட்களுக்குப்பின் இயேசுவைக் கோவிலில் கண்டனர்.
இயேசு காணாமல் போனபோது யோசேப்பு மரியாவிடம் பல கேள்விகளை எழுப்பியிருக்கலாம். நீ எல்லாம் ஒரு தாயா? இருப்பது ஒரே மகன்; அந்த ஒரே மகனைக்கூட உன்னால் கவனிக்க முடியலையா? என்னிடம் விட்டிருந்தால் நான் பார்த்திருப்பேனே! என்னதான் நினைத்துக்கொண்டு நடக்கிறாய்? பையன் கிடைக்கலேண்ணா பாரு! என்று ஆணாதிக்க அசுத்தங்களைக் கொட்டி மரியாமீது பழி சுமத்தியிருக்கலாம். வேண்டுமென்றால் நீயே போய் தேடிக் கண்டுப்பிடித்துக் கூட்டி வா எனக் கோப நெருப்பைக் கொட்டியிருக்கலாம். ஆனால், யோசேப்புவோ அந்நேரத்தில் அமைதியாக இறைவனின் அடுத்த திட்டம் என்னவோ என எண்ணியபடி தம் மனைவி மரியாவோடு தேடலைத் தொடர்ந்தார்.
இன்பத் துன்பங்களைப் பங்கிடும் களமே குடும்பம். இங்கே ஒரு கண்ணில் தூசி விழுந்தால் மறுகண் அழுகின்ற நியதிதான் உயிர் வாழும். இதை மறந்து குடும்பத்தில் நல்லவை நடந்தால் அதற்கு “நான்தான்” எனப் பொறுப்பேற்பதும், அல்லவை நடந்தால் “நீதான்” எனப் பழி சுமத்துவதும் இல்வாழ்வுக்கு அழகல்ல. ஒவ்வொரு குடும்பமும் மனித குலம் பெற்றுள்ள மிகச் சிறந்தப் பிரதி. அதனை அன்பு, மதிப்பு, மன்னிப்பு ஆகியவற்றால் கட்டியெழுப்பக் கடமைப்பட்டுள்ளோம். இப்பார்வைதனை யோசேப்பு தன்னகமேற்று வாழ்ந்தார். எனவேதான் திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண் பவுல், “புனித யோசேப்பு நேர்மையாலும் கடின உழைப்பாலும் குழந்தை இயேசுவை அக்கறையோடு பாதுகாக்கும் பொறுப்பில் சிறந்து விளங்கியதால் நம் குடும்பங்களையும் எப்போதும் பாதுகாத்து வழிநடத்துவார்” எனும் நம்பிக்கையின் சொற்றொடரைத் தம் திருமடலில் தொடுத்துள்ளார்.
யோசேப்பு சந்தித்த தடைகள், சவால்கள், வேதனைகள், ஏமாற்றங்கள் யாவும் நம் வாழ்விலும் எழலாம். அவை நம்மைத் துவண்டு போகச் செய்பவை அல்ல; துணிந்து பயணிக்கப் பாடம் சொல்பவை. வேகமாய், விவேகமாய் நடந்து கடவுளோடு கைகோர்த்துப் பயணிக்க நம்மைப் பண்படுத்துபவை. யோசேப்பு, ஆண்டில் குடும்ப-குழுமப் பொறுப்பை ஏற்றுள்ள ஒவ்வொருவரும் அவரிடமிருந்து ஏராளம் கற்றுக்கொள்வோம். அவரைப் போல இறைத்திட்டத்திற்குப் பணிந்து எப்படி வாழ்வது எனக் கொஞ்சம் யோசிக்கலாமே!
0 Comments